பீகாரில் பாஜகவுக்கு எதிராக ஆர்.ஜே.டியுடன் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி!
பாட்னா: பீகாரில் பாரதிய ஜனதாவை எதிர்கொள்ள லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளமும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் கூட்டணி அமைக்கின்றன. இதற்கான பேச்சுவார்த்தைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
லோக்சபா தேர்தலில் ஐக்கிய ஜனதா தளமும் ராஷ்டிரிய ஜனதா தளமும் படுதோல்வியை சந்தித்தன. பீகாரில் பாரதிய ஜனதாவின் கை ஓங்கியது.
இந்த தேர்தல் முடிவுகள் வெளியான உடனேயே லாலு பிரசாத் யாதவும் நிதிஷ்குமாரும் கை கோர்த்துவிட்டனர். பீகார் ஆளும் ஐக்கிய ஜனதா தள அரசுக்கு ராஷ்டிரிய ஜனதா தளம் ஆதரவும் அளித்து வருகிறது.
அண்மையில் ராஜ்யசபா தேர்தலில் இரண்டு கட்சிகளும் கை கோர்த்தன. இதற்கு எதிராக ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் ஐக்கிய ஜனதா தளத்தில் சலசலப்புகள் எழுந்துள்ளன.
ஆனாலும் இந்த இரு கட்சித் தலைவர்களும் முறையான கூட்டணிப் பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றனர். இது பாஜகவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.