16 நாட்களில் 34 புதிய கட்சிகள் உதயம்... அங்கீகரிக்கப்படாத கட்சிகள் 1627 ஆனது
டெல்லி: லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மார்ச் மாதத்தில் மட்டும் சுமார் 34 புதிய கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளனவாம். இதன் மூலம் இந்தியாவில் அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் எண்ணிக்கை 1627 ஆக உயர்ந்துள்ளது.
தேர்தல் ஆணையக் கணக்குப்படி, கடந்த மார்ச் 10ம் தேதி வரை சுமார் 1593 அக்கிகரிக்கப்படாத கட்சிகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. அதனைத் தொடர்ந்து, அதாவது மார்ச் 11ம் தேதி முதல் மார்ச் 21ம் தேதி வரை சுமார் 24 புதிய கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளன.
அதற்கடுத்த 6 நாட்களில் மேலும் 10 புதிய கட்சிகள் பதிவாகின. இதன் முலம் 16 நாட்களில் மொத்தம் 34 புதிய கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் ஆணைய சுற்றறிக்கையின் படி, இவர்களுக்கு 87 சின்னங்கள் கொண்ட தொகுப்பு வழங்கப் பட்டுள்ளது. அவற்றில் ஒன்றை தேர்ந்தெடுக்க அவர்களுக்கு வாய்ப்பளிக்கப் பட்டுள்ளது.
தற்போது நாட்டில் பாஜக, பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தேசியவாத காங்கிரஸ் என மொத்தம் ஆறு அங்கீகரிக்கப் பட்ட தேசியக் கட்சிகள் உள்ளது.