சபரிமலையில் பூஜை நடக்கும் நேரங்கள்.. எப்போது எல்லாம் அனுமதி கிடையாது.. கடும் கட்டுப்பாடுகள்!
சபரிமலை: கேரள அரசின் கொரோனா கெடுபிடிகளால சபரிமலக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்துள்ளது. நிலக்கல் பார்க்கிங் பகுதி களையிழந்து காணப்படுகிறது.
இது ஒருபுறம் எனில் வருகை தரும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பூஜை நேரங்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது,.
கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டத்தில் உள்ளது மண்டல கால பூஜைகளுக்காக கடந்த 15ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது 16ம் தேதி முதல் மண்டல கால பூஜை தொடங்கியது. பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள்.
சபரிமலையில் கடும் கட்டுப்பாடு - பக்தர்கள் கண்குளிர ஐயப்ப தரிசனம் - வியாபாரிகளுக்கு பாதிப்பு
பூஜை நடக்கும் நேரங்கள்
கடும் கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்துள்ளது. இந்த நிலையில் 41 நாள் தொடரும் மண்டல கால பூஜைகள், டிசம்பர் 26ம் தேதி வரை நடைபெறும் பிரசித்திபெற்ற மண்டல பூஜையுடன் நிறைவடைகிறது. பூஜை நடைபெறும் நேரங்களில் பக்தர்கள் 18ம் படி ஏற அனுமதியில்லை. காலை 5 மணிக்கு நடைதிறந்த பிறகு நிர்மால்யம், கணபதிஹோமம் முடிய 45 நிமிடங்கள் ஆகும். அதன் பிறகு 5.45 மணிக்குமேல் பக்தர்கள் 18ம் படி ஏற அனுமதிக்கப்படுவர். பின்னர் 7 முதல் 9 மணிவரை உஷபூஜை, உதயாஸ்தமன பூஜை நடைபெறுகிறது.
பக்தர்களுக்கு அனுமதியில்லை
உச்சிகால பூஜைக்கு பின்னர் நண்பகல் 12 மணியளவில் களபாபிஷேகம், மீண்டும் மாலையில் 6 முதல் 7 மணிவரை புஷ்பாபிஷேகம் நடைபெறும். இந்த நேரங்களிலும் பக்தர்களுக்கு அனுமதியில்லை. கமண்டல மற்றும் மகரவிளக்கு சீசனில் படிபூஜை நடைபெறாது. இந்த ஆண்டு பக்தர்கள் அதிகம் வராததால் படிபூஜை நடக்கிறது. இரவு 8 மணிக்குமேல் பக்தர்களுக்கு அனுமதியில்லை. சன்னிதானத்தில் இருந்து வெளியேறிவிட வேண்டும்.
நேரடியாக தரிசனம்
இரவு 7 மணிக்கு மேல் பம்பையில் இருந்து பக்தர்கள் சன்னிதானம் செல்ல அனுமதி இல்லை. கூட்டம் இல்லாததால் கோயில் வளாகத்தில் உள்ள மேல்பாலம் வழியாக பக்தர்கள் செல்ல வேண்டியதில்லை. கொடி மரத்தின் வலது பகுதி வழியாக சென்று நேரடியாக தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
முககவச்ம் போடவிட்டால் ரூ.200
கேரளாவில் கொரோனா அதிகமாக இருப்பதால் மாஸ் இல்லாமல் சென்றால் ரூ.200 அபராதம் விதிக்கப்டுகிறது.. எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது. வழக்கமாக சபரிமலை சீசனில் நிலக்கல் ரப்பர் எஸ்டேடில் 300 ஏக்கர் பார்க்கிங்கில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கும். இந்த ஆண்டு கொரோனா பீதி காரணமாக ஆள் அரவமற்று வெறிச்சோடி காணப்படுகிறது.
கொரோனா சான்றிதழ்
ஆன்லைன் தரிசனத்திற்கு முன்பதிவு செய்து அத்துடன் 24 மணி நேரத்திற்கு முன் எடுத்த கொரோனா நெகட்டிவ் சான்றிதழை இணைத்த கேரள பாஸ் காண்பித்தால் மட்டுமே பக்தர்கள் சன்னிதானம் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் நடைதிறக்கப்பட்ட முதல் இரண்டு நாட்களில் 500க்கும் குறைவான பக்தர்களே தரிசனம் செய்தார்கள்.