பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலங்கள் பட்டியல் வெளியீடு... பெண் முதல்வர் ஆளும் தமிழகத்திற்கு 6-வது இடம்
டெல்லி : இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலங்கள் பட்டியலில் முதலிடத்தில் நாகலாந்து உள்ளது. தமிழகம் 6-வது இடத்தை பிடித்து உள்ளது. தேசிய குற்றப் பதிவு ஆணையத்தால் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுக்களால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நிகழ்ந்த வண்ணமே உள்ளன.
பாலியல் பலாத்காரம் சம்பவம் முதல் குடும்ப வன்முறைகள் வரையில் கொடிய குற்றங்களை பெண்கள் எதிர்கொண்டு வருகின்றனர். டெல்லி, மகாராஷ்ட்ரா மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்கள் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகமாக நடைபெறும் மாநிலங்களாக உள்ளன.
இதற்கிடையே இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலங்கள் எதுவென்று பார்த்தால்? யூனியன் பிரதேசங்கள் பாதுகாப்பானவை என்று தேசிய குற்றப் பதிவு ஆணையத்தால் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவித்து உள்ளது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகலாந்து, பாதுகாப்பான மாநிலங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து உள்ளது. தேசிய குற்றப் பதிவு ஆணைய தகவலின்படி, 2014-ம் ஆண்டு மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 67 நடந்து உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியா யூனியன் பிரதேசங்களில் ஒன்றான லட்சத்தீவு 2 வது இடத்தில் உள்ளது. பிரதேசத்தின் மொத்த பெண்கள் அடிப்படையில் குற்றங்களின் எண்ணிக்கையானது 10 சதவீதம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்தியாவின் பாதுகாப்பான மாநிலங்கள் பட்டியலில், மூன்றாவது இடத்தை புதுச்சேரி பிடித்து உள்ளது. அங்கு கடந்த 2014-ம் ஆண்டு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 77 வழக்குகள் பதிவாகி உள்ளன. புதுச்சேரியில் மொத்த பெண்கள் அடிப்படையில் குற்றங்களின் எண்ணிக்கையானது 10.6 சதவீதம் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நான்கவதாக தத்ரா நாகர் ஹவேலியும், ஐந்தாவதாக டாமன் மற்றும் டையூவும் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.
இந்தியாவில் பாதுகாப்பான மாநிலங்கள் பட்டியலில் 6 வது இடம்பிடித்து உள்ள முதல் பெரிய மாநிலம் தமிழகம். இங்கு பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பாக 6325 குற்றங்கள் பதிவாகி உள்ளன. இருப்பினும் மாநிலத்தில் மொத்த பெண்கள் எண்ணிக்கையில் கருத்தில் கொள்கையில் தமிழகத்தில் குற்றங்களின் எண்ணிக்கையானது 18.4 சதவிதமாக உள்ளது.
ஏழாவதாக மணிப்பூரும், எட்டாவதாக மேகலாயாவும், ஒன்பதாவதாக உத்தரகாண்ட்டும் இடம் பிடித்துள்ளன.
இந்தியாவில் பாதுகாப்பான மாநிலங்கள் பட்டியலில் பீகார் 10 வது இடத்தை பிடித்து உள்ளது. பீகாரில் மொத்த பெண்கள் எண்ணிக்கையில் குற்றங்கள் எண்ணிக்கையானது 31.3 சதவிதம் ஆகும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்தியாவில் பாலியல் பாலத்கார சம்பவங்கள் அதிகமாக நடைபெறும் மாநிலமாக தலைநகர் டெல்லி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் அதிகமான பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவாகிஉள்ளன. அங்கு கடந்த 2014-ம் ஆண்டில் மட்டும் 1,800 வழக்குகள் பதிவாகிஉள்ளன. 2013-ம் ஆண்டு 1,440 வழக்குகள் பதிவாகிஉள்ளது.
டெல்லியில் கடந்த 2014-ம் ஆண்டில் மட்டும் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவம் தொடர்பாக 15,265 வழக்குகள் பதிவாகிஉள்ளது. இது நாட்டில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறைகளில் 4.5 சதவீதம ஆகும். மெட்ரோ நகரங்களை கணக்கில் கொள்கையில் கொல்கத்தா பாதுகாப்பு நகரமாக உள்ளது. கொல்கத்தாவில் மட்டும் இதுபோன்று 36 வழக்குகள் பதிவாகி உள்ளன.