பாபர் மசூதி நில பிரச்சனை: மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்
பாபர் மசூதி நிலம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்திருக்கிறது.
டெல்லி: பாபர் மசூதி நிலப் பங்கீடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 நிலம் யாருக்கு சொந்தமானது என்பது குறித்து 60 ஆண்டுகாலமாக வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் 2010-ம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியது.
அத்தீர்ப்பில் 2.77 ஏக்கர் நிலத்தின் ஒரு பகுதியை நிர்மோகி அகாடா பரிஷத்துக்கும் மற்றொரு பகுதி ராமர் கோவில் கட்டவும் எஞ்சிய பகுதி முஸ்லிம்களின் சன்னி வக்பு வாரியத்துக்கும் சொந்தம் என தீர்ப்பளித்தது. ஆனால் இத்தீர்ப்பை மூன்று தரப்பும் ஏற்கவில்லை.
இத்தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 2010-ம் ஆண்டு பல மேல்முறையீட்டு மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் அனைத்தும் நிலுவையில் உள்ளன.
பாஜகவின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமியும் ஒரு மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி கேஹர் மற்றும் சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச்சிடம் இந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது விரைவில் விசாரணை நடத்த வேண்டும் என சுப்பிரமணியன் சுவாமி இன்று வலியுறுத்தினார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த மேல்முறையீட்டு மனுக்கள் விரைவில் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என உறுதியளித்தனர்.