ஜெ. விடுதலைக்கு எதிரான சொத்துக் குவிப்பு அப்பீல் வழக்கில் அடுத்த மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
டெல்லி: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு 4 வாரங்களில் வழங்கப்படும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் 1991 முதல் 1996-ஆம் ஆண்டு வரை முதல்வராக ஜெயலலிதா இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக ரூ66 கோடி சொத்து குவித்தார் என 1996-ல் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா கடந்த ஆண்டு தீர்ப்பளித்தார்.
ஆனால் ஜெயலலிதா உள்ளிட்டோரின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்ற தனிநீதிபதி குமாரசாமி 4 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு எதிராக கர்நாடகா அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
தீர்ப்பு ஒத்திவைப்பு
உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திர கோஸ், அமிதவா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கர்நாடகாவின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்து தீர்ப்பை ஒத்தி வைத்தது. இதனிடையே தமிழகத்தைச் சேர்ந்த பி. ரத்னம் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.
புதிய மனு
அதில், சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடகா அரசு வழக்கறிஞராக பிவி ஆச்சார்யா ஆஜரான போது அவருக்கு அழுத்தங்கள் இருந்ததாக தம்முடைய சுயசரிதையில் கூறியுள்ளார். எனவே, அவரிடம் விசாரணை நடத்த வேண்டும். இந்த வழக்கில் ஆச்சார்யா நேர்மையான முறையில் ஆஜராகி செயல்பட்டாரா என்பதையும் விசாரிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார்.'
4 வாரங்களில் தீர்ப்பு
இம்மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திர கோஸ், அமிதவா ராய் ஆகியோர் பெஞ்ச் இன்று விசாரித்தது. அப்போது மனுதாரர் தரப்பில் தனது வாதத்தை முன் வைக்க வந்தார். ஆனால், வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
விசாரணை ஒத்திவைப்பு
இத்தனை நாட்களுக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைக்கக் காரணம் என்ன என்று மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த நீதிபதிகள், ஜெயலலிதா விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் அடுத்த 4 வாரத்தில் தீர்ப்பு வெளியிடப்பட உள்ளது. அதனை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதிகள் விளக்கம் அளித்தனர்.