நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல்: 7 மாநிலங்களுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
டெல்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பாக ஆந்திரா உட்பட 7 மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கை உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் சிபிஐ விசாரித்து வருகிறது. இன்றைய விசாரணையின் போது, குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு மட்டுமே எப்போதும் ஏன் சுரங்க ஒதுக்கீடு வழங்கப்படுகிறது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும் இந்த ஒதுக்கீடுகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் என்ன கருதுகிறது? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும் மேற்கு வங்கம், ஆந்திரா, மத்தியபிரதேசம், ஜார்கண்ட், ஒடிஷா, சத்தீஸ்கர், மகாராஷ்டிரா ஆகிய 7 மாநிலங்களும் இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வரும் அக்டோபர் 29ம் தேதிக்குள் 7 மாநிலங்களும் இது தொடர்பாக பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.