சட்டவிரோத டெலிபோன் எக்சேஞ்ச்: தயாநிதியை கைது செய்ய சுப்ரீம் கோர்ட் தடை நீட்டிப்பு
டெல்லி: சட்டவிரோத டெலிபோன் இணைப்பக வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனை கைது செய்வதற்கான தடையை உச்சநீதிமன்றம் இன்று நீட்டித்துள்ளது.
700க்கும் அதிகமான பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகள் மூலம் சட்டவிரோதமாக ஒரு இணைப்பகத்தை தன் வீட்டில் வைத்திருந்தார் தயாநிதி மாறன் என்பது சி.பி.ஐ. வழக்கு.
இந்த சட்டவிரோத தொலைபேசி இணைப்பகங்கள் மூலம் தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறன் நடத்தும் சன் டிவி குழுமம் ஆதாயம் அடைந்தது என்பதும் குற்றச்சாட்டு.
இந்த வழக்கில் தயாநிதி மாறனுக்கு 6 வார இடைக்கால முன் ஜாமீன் வழங்கியிருந்தது சென்னை உயர்நீதிமன்றம். ஆனால் சி.பி.ஐ. விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்காத காரணத்தால் அவரது முன் ஜாமீனை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சி.பி.ஐ. முறையிட்டது.
இம்மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தயாநிதி மாறனுக்கு வழங்கிய முன் ஜாமீனை ரத்து செய்து சி.பி.ஐ. முன் சரணடையவும் உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தயாநிதி மாறன் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்றுவரை (செப்டம்பர் 14) தயாநிதி மாறனை கைது செய்ய இடைக்கால தடைவிதித்தது. இந்த நிலையில் இன்று இவ்வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.
அப்போது இவ்வழக்கில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் கால அவகாசம் வழங்கியது. மேலும் மறு உத்தரவு வரும்வரை தயாநிதி மாறனை கைது செய்வதற்கான தடையை நீட்டித்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இவ்வழக்கின் அடுத்த கட்ட விசாரணை அக்டோபர் 1-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் தயாநிதி மாறன் மீண்டும் சி.பி.ஐ. கைது நடவடிக்கையில் இருந்து தப்பியுள்ளார்.