அரசு பங்களாவை காலி செய்யாத முன்னாள் அமைச்சர்கள்: மத்திய அரசுக்கு நோட்டீஸ்!
டெல்லி: அரசு பங்களாவை காலி செய்யாமல் இருக்கும் முன்னாள் அமைச்சர்கள் குறித்த வழக்கில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதையடுத்து கடந்த மே மாதம் 26ஆம் தேதி மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பொறுப்பேற்றது.
இந்நிலையில், முன்னாள் தணிக்கைத்துறை தலைவர் வினோத் ராய் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ''மத்தியில் ஆட்சி மாறியும் டெல்லியில் உள்ள அரசு பங்களாக்களில் பல முன்னாள் அமைச்சர்கள் இன்னும் வசித்து வருகின்றனர். அதில் சிலர் பல ஆண்டுகளாக காலி செய்யாமல் அங்கே வசித்து வருகின்றனர்.
குறிப்பாக, முன்னாள் ரயில்வே அமைச்சரான லல்லு பிரசாத் யாதவ் தனது பேத்தி படிப்பை முடிப்பதற்காக இன்னும் வீட்டை காலி செய்யவில்லை'' எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கின் விசாரணை இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கு தொடர்பாக 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.