ஜெ. வழக்கு: பவானிசிங்கை நீக்க கோரும் அன்பழகன் மனு மீதான விசாரணை மார்ச் 24-க்கு ஒத்திவைப்பு
டெல்லி: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் ஆஜராகிய அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை நீக்க கோரி தி.மு.க பொதுச்செயலாளர் அன்பழகன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை மார்ச் 24-ந் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் 4 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தனி பெஞ்ச் நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நடைபெற்றது.

ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் அளித்துள்ளதால், அவர்கள் வெளியில் இருந்தபடி வழக்கை நடத்தினர். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பை நீதிபதி குமாரசாமி ஒத்திவைத்துள்ளார்.
இதனிடையே கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் இந்த மேல்முறையீட்டு விசாரணை முறையாக நடக்காததால், அதற்கு தடை விதிக்க வேண்டும்; அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை வழக்கில் இருந்து நீக்க வேண்டும் என்று தி.மு.க. பொதுச்செயலர் க. அன்பழகன் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மேல்முறையீட்டு விசாரணைக்கு தடை விதிக்க மறுத்தது. அதே நேரத்தில் பவானிசிங்கை நீக்கக் கோரும் மனு மீது மார்ச் 18-ந் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று ஜெயலலிதா, சசிகலா, இளவரசி. சுதாகரன் மற்றும் கர்நாடகா அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
இந்நிலையில் அன்பழகனின் மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி லோகுர் தலைமையிலான பெஞ்ச் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அன்பழகன் தரப்பு வழக்கறிஞர், வழக்கின் முக்கியத்துவம் கருதி விரைவாக விசாரணை நடத்த வேண்டும் என்று வாதிட்டார்.
இதனை ஏற்ற நீதிபதி லோகுர் தலைமையிலான பெஞ்ச், அன்பழகன் மனு மீது வரும் 24-ந் தேதி விசாரணை நடைபெறும் என்று ஒத்திவைத்தது.












Click it and Unblock the Notifications