நீட் போராட்டத்தை தடை செய்யக் கோரும் வழக்கு.. சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
அனிதா மரணம் தொடர்பான வழக்கை அவசர வழக்காக நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
டெல்லி: அனிதா மரணம் தொடர்பான வழக்கை அவசர வழக்காக நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்த நீட் தேர்வால், தமிழகத்தில் ப்ளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்துள்ள மாணவ, மாணவிகள் மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்க முடியாதநிலை ஏற்பட்டது.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த அனிதா என்ற மாணவி, ப்ளஸ் டூ தேர்வில் 1176 மதிப்பெண்கள் எடுத்திருந்த நிலையில், நீட் தேர்வில் 86 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்திருந்தார். இதனால் அவரது மருத்துவக் கனவு கலைந்து போகவே மனஉளைச்சலில் இருந்த அனிதா, கடந்த 1ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். நீட் தேர்வுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் தொடர்ந்து நடந்துவருகிறது.
இதனிடையே, நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் நடந்துவரும் போராட்டங்களுக்குத் தடை விதிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் ஜி.எஸ்.மணி என்பவர் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தமிழக அரசு சட்டம்- ஒழுங்கைப் பாதுகாக்கவும், அரசியல் கட்சியினர் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகப் போராட்டம் நடத்தத் தடை விதிக்க வேண்டும்.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு நிகராக மாநிலப் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க உத்தரவிட வேண்டும். அனிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.
அனிதா மரணம் தொடர்பாக அரசியல் கட்சிகள் நடத்தும் போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுதாரர் கோரிக்கை விடுத்தார்.
இந்த வழக்கை, அவசர வழக்காக ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளது. கடந்த 5 ஆம் தேதி இந்த மனு விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள், அவசர வழக்காக விசாரிக்க என்ன தேவையிருக்கிறது என்று கேள்வி எழுப்பியதோடு, மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்து, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர். நாளை வெள்ளிக்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.