சர்ச்சையை ஏற்படுத்திய நீதிபதி லோயா வழக்கு விசாரணை... தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்!
நீதிபதி லோயா மரண வழக்கு சரி வர விசாரிக்கப்படவில்லை என்று 4 நீதிபதிகள் சர்ச்சை ஏற்படுத்தி இருந்த நிலையில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு திங்கட்கிழமை விசாரிக்கிறது.
டெல்லி : உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு நீதிபதி லோயா மரண வழக்கை விசாரணைக்கு எடுக்கிறது. நீதித்துறையில் சர்ச்சையை ஏற்படுத்திய 4 நீதிபதிகளின் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான நிலையில் இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நீதிபதி ஏஎம் கன்வில்கர் மற்றும் டிஒய் சந்திரசத் தலைமையிலான உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு நேற்று ஒரு முடிவை எடுத்துள்ளது. இதன்படி நீதிபதிகள் சர்ச்சை கிளப்பிய நீதிபதி லோயா மரண வழக்கு விசாரணையை தலைமை நீதிபதி அமர்வு விசாரிக்கும் என்று ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இனி நீதிபதி லோயா மரண வழக்கானது தலைமை நீதிபதி அமர்வு முன்னிலையிலேயே விசாரணை நடக்கும் என்று சனிக்கிழமை வெளியிடப்பட்ட நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. நீதிபதி லோயா மரண விசாரணை குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்கள், நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான இரண்டு நபர் அமர்வின் விசாரணைக்கு ஒதுக்கப்பட்டது. உச்சநீதிமன்ற 10வது நீதிமன்றத்தின் சீனியர் நீதிபதிகள் இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் லோகூர், குரியன் ஜோசப் உள்ளிட்ட 4 நீதிபதிகள் வழக்குகள் ஒதுக்கப்படுவதில் பாரபட்சம் இருப்பதாக தெரிவித்தனர். நீதிபதி லோயா மரண வழக்கு ஒதுக்கீடு உள்பட பல வழக்குகளை நீதிபதிகள் இதற்கு உதாரணமாக சொல்லியிருந்தனர்.
நீதிபதி அருண் மிஸ்ரா, கடந்த வாரம் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போது தான் லோயா வழக்கை நேர்மையாக விசாரித்ததாகவும், தன் மீதான குற்றச்சாட்டு வேதனை அளிப்பதாகவும் மனம் திறந்து சொல்லி இருந்தார். இதற்கு நீதிபதி அருண் மிஸ்ராவை குற்றம்சாட்டுவது தங்களின் நோக்கமல்ல பிரச்னையை தான் எடுத்துச் சொல்வதாக நீதிபதி செல்லமேஸ்வர் அவருக்கு ஆறுதல் கூறி இருந்தார்.
நீதிபதி லோயா கடந்த 2041ம் ஆண்டு நாக்பூரில் 48 வயதில் மர்மமான முறையில் மரணமடைந்தார். 2005ம் ஆண்டு பாஜக தலைவர் அமித்ஷா உத்தரவிட்ட போலி என்கவுண்டர் வழக்கை விசாரித்து வந்தவர் நீதிபதி லோயா. நீதிபதி லோயா மரணமடைந்த ஒரு வாரத்தில் வேறு நீதிபதி அந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி அமித்ஷாவை நீதிமன்றம் விடுதலை செய்தது.
இரண்டு மாதங்களுக்கு முன்பு நீதிபதி லோயாவின் உறவினர்கள் அவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குற்றம்சாட்டி இருந்தார். லோயாவின் சகோதரர் அனுராதா பியானியும் அமித்ஷாவிற்கு ஆதரவாக பேசுவதற்காக தனக்கு லஞ்சம் தரப்பட்டதாக தெரிவித்தார். மஹாராஷ்டிராவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் பிஎஸ் லோன், செயற்பாட்டாளர் தெஹ்சீன் பூனவாலா உள்ளிட்டோர் சுதந்திரமான விசாரணை கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.