அனைத்து விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி... உயர் நீதிமன்ற உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை
அனைத்து விவசாயிகளுக்கும் விவசாயக் கடன் தள்ளுபடி என்ற உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
டெல்லி: 5 ஏக்கருக்கு மேல் நிலம் உள்ள விவசாயிகளின் கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
கடந்த 2016 -ஆம் ஆண்டு கூட்டுறவு வங்கி விவசாயக் கடனை தள்ளுபடி செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. 5 ஏக்கர் வரை வைத்திருப்போரின் கடன்களை மட்டும் தள்ளுபடி செய்வதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனிடையே 5 ஏக்கருக்கு மேல் வைத்திருந்தாலும், வறட்சியால் பாதிக்கப்பட்டதால் விவசாயிகளின் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கூறி தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அனைத்து விவசாயிகளின் கடன்களையும் ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கடந்த மே மாதம் மேல்முறையீடு செய்தது. அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் எனவும் தமிழக அரசு தெரிவித்திருந்தது.
தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவானது இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதி, அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார்.
மேலும் 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு எந்த அடிப்படையில் கடன் தள்ளுபடி கோரப்பட்டது என்பது குறித்து அய்யாகண்ணு உள்ளிட்டோர் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.