வரதட்சணை கொடுமைப் புகார்... தீர விசாரிக்காமல் கைது செய்யக்கூடாது...சுப்ரீம்கோர்ட் அதிரடி!
வரதட்சணைக் கொடுமை புகார்கள் வந்தால் உடனடியாக யாரையும் கைது செய்ய வேண்டிய அவசியமில்லை என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது.
டெல்லி : பெண்களுக்கு எதிரான வரதட்சணை கொடுமை வழக்கில் தீர விசாரிக்காமல் உடனடியாக யாரையும் கைது செய்யக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெண்களில் சிலர் வரதட்சணைக் கொடுமை வழக்குகளை தவறாகப் பயன்படுத்தி கணவர் மற்றும் கணவரின் குடும்பத்தாருக்கு தண்டனை வாங்கித் தருவதாக பரவலாக குற்றம் சாட்டப்படுகிறது.
இந்நிலையில் வரதட்சணைக் கொடுமை புகார்கள் தவறாக பயன்படுத்துவது குறித்து வழக்கு விசாரணை ஒன்றின் போது கருத்து தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், வரதட்சணைக் கொடுமைப் புகார் அளிக்கப்பட்டால் உடனடியாக யாரையும் கைது செய்யக் கூடாது என்று கூறியுள்ளது.
இந்திய தண்டனைச் சட்டம் 498 ஏ பிரிவை பயன்படுத்தி சில பெண்கள் மாமியார், மாமனார், கணவரின் உறவினர்களுக்கும் சேர்த்து தண்டனை வாங்கித் தருகின்றனர். சட்டத்தை தவறாக பயன்படுத்துவது ஏற்க முடியாது.
விசாரித்து நடவடிக்கை
4 சுவற்றிற்குள் நடக்கும் விஷயம் அதாவது வரதட்சணைக் கொடுமை குறித்து புகார் வந்தால் அதனை விசாரித்தே நடவடிக்கை எடுக்க முடியும். குற்றம்சாட்டப்பட்டவர் நிரபராதியாக இருக்கும் பட்சத்தில் எந்த விசாரணையும் நடத்தாமல் உடனடியாக அவரை கைது செய்வது மனித உரிமை மீறல்.
குடும்ப நல அமைப்பு
வரதட்சணைப் புகார் குறித்து விசாரிக்க மாவட்டம் தோறும் குடும்ப நல அமைப்புகளை உருவாக்க வேண்டும். அந்த அமைப்புகளின் முன்பு புகாருக்கு ஆளான குடும்பத்தினர் தங்கள் தரப்பை விளக்க வேண்டும். குடும்ப நல அமைப்பு தரும் அறிக்கை அடிப்படையில் கைது நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் ஏ.கே.கோயல், யுயு லலித் அமர்வு கூறியுள்ளது.
ஒரு மாதத்திற்குள் விசாரணை
குடும்ப நல அமைப்புகளில் சமூக செயற்பாட்டாளர்கள், ஓய்வு பெற்ற அதிகாரிகள், அரசு அதிகாரிகளின் மனைவி உள்ளிட்டோர் அங்கம் வகிக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. புகார் கொடுத்த ஒரு மாதத்திற்குள் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும்.
தவறாக பயன்படுத்தக் கூடாது
விசாரணை ஆணையத்தின் அறிக்கையை வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி அல்லது மாஜிஸ்திரேட்டிடம் தாக்கல் செய்யலாம். வரதட்சணைக் கொடுமை சட்டத்தை தவறாக பயன்படுத்துவதைத் தடுக்க சட்டத்திருத்தம் மேற்கொள்ளவும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் ஏற்கனவே பரிந்துரை செய்துள்ளது.