கையில் ஷூவுடன் மகா விஷ்ணு போல போஸ்.. டோணி மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் தடை
டெல்லி: மகா விஷ்ணுவைப்போல போஸ் கொடுத்த இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோணிக்கு எதிராக கிரிமினல் வழக்கு தொடர, சுப்ரீம்கோர்ட் தடை விதித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரும், ஒருநாள் மற்றும் டி20 அணிக்கான கேப்டனுமான டோணி, ஆங்கில வார இதழ் ஒன்றிற்கு கடவுள், மகா விஷ்ணு போன்ற வேடமணிந்து போஸ் கொடுத்திருந்தார். மகாவிஷ்ணுவை போல பல கரங்களுடன் காணப்பட்ட டோணியின் கைகளில் பல்வேறு பொருட்கள் இருந்தன. அதில் ஷூவும் அடக்கம்.
இந்நிலையில், டோணி மற்றும் அந்த வார இதழின் நடவடிக்கை மத உணர்வுகளை புண்படுத்துகிறது என்று கூறி, சமூக சேவகரான கர்நாடகாவை சேர்ந்த ஜெயகுமார் ஹிரேமட் என்பவர், அம்மாநில ஹைகோர்ட்டில் வழக்கு தொடந்தார். சட்டப்பிரிவு 295ஏ பிரிவின்கீழ், டோணியின் செயல் கிரிமினல் நடவடிக்கைக்கு உட்படக்கூடியது என்று வாதம் சமர்ப்பிக்கப்பட்டது.
விசாரித்த, கர்நாடக ஹைகோர்ட், டோணி போன்ற முக்கிய பிரமுகருக்கு, தனது செயலால் என்ன விளைவு ஏற்படும் என்பது தெரிந்திருக்க வேண்டும் என்பதால், வழக்கு தொடர அனுமதியளிப்பதாக கூறியது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் டோணி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி பி.சி.கோஷ் தலைமையிலான அமர்வு, டோணிக்கு எதிரான கிரிமினல் நடவடிக்கைக்கு தடை விதித்து இன்று உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவு மூலம், டோணி நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார்.