தெலுங்கானாவுக்கு கேபினட் ஒப்புதலை எதிர்த்து சீமாந்திராவில் 48 மணிநேர பந்த்
விசாகப்பட்டினம்: தெலுங்கானா தனி மாநிலத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சீமாந்திராவில் இன்று முதல் 48 மணி நேர முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது.
தெலுங்கானாவுடன் ராயலசீமாவின் 2 மாவட்டங்களை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கானாவின் 10 மாவட்டங்களில் நேற்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் தெலுங்கானாவில் 2 மாவட்டங்களை இணைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட்டது. அத்துடன் 10 மாவட்டங்களை உள்ளடக்கிய தெலுங்கானா தனி மாநிலத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இதற்கு கடலோர ஆந்திரா, ராயலசீமாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் சார்பில் சீமாந்திரா பகுதியில் இன்று முதல் 48 மணி நேர முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 4 மாதங்களாக ஆந்திராவின் 75% மக்கள் ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் மத்திய அரசு மக்களின் உணர்வுகளை மதிக்காமல் வாக்குக்களுக்காக ஆந்திராவை துண்டாட நினைக்கிறது என்று ஜெகன்மோகன் சாடியுள்ளார்.
இப்போராட்டத்துக்கு தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவும் ஆதரவு தெரிவித்திருக்கிறார்.