பலூனில் விந்தணுக்களை நிரப்பி அதை மாணவி மீது தூக்கி எறிந்த மர்மநபர்... டெல்லியில் ஷாக் சம்பவம்
கல்லூரி மாணவி மீது விந்தணுக்கள் நிரப்பப்பட்ட பலூனை மர்மநபர் தூக்கி எறிந்த சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.
டெல்லி: டெல்லியில் ஆட்டோ ரிக்ஷாவில் சென்று கொண்டிருந்த கல்லூரி மாணவி மீது விந்தணுக்கள் நிரப்பப்பட்ட பலூனை மர்மநபர் தூக்கி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி பல்கலைக்கழக கல்லூரி மாணவி ஒருவர், கடந்த 24ம் தேதி தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அம்மாணவி அப்பதிவில் கூறியிருப்பதாவது, 'சம்பவத்தன்று நான் எனது தோழியுடன் மதிய உணவை அமர் காலனி மார்க்கெட்டில் உள்ள உணவகத்தில் முடித்துவிட்டு, மீண்டும் கல்லூரி ஹாஸ்டலுக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். மாலை 5 மணியளவில் ரிக்ஷாவில் அமர்ந்திருந்த என் மீது பலூன் ஒன்று வந்து விழுந்தது. உள்ளே திரவம் போன்று ஏதோ நிரப்பப்பட்டிருந்த அந்த பலூன், என் இடுப்புப் பகுதியில் பட்டு உடைந்து கீழே விழுந்தது. இதனால் எனது கருப்பு நிற பேண்ட் ஈரமானது. பின்னர் அது காய்ந்தபோது வெள்ளை நிறமாக காட்சியளித்தது.
நான் முதலில் அது விந்தணுக்களாக இருக்கும் எனக் கருதவில்லை. ஆனால், ஹாஸ்டலுக்குத் திரும்பியதும் எனது தோழிகள் தான் அதனைக் கவனித்து அது விந்தணுக்கள் எனக் கூறினர். இதனால் நான் அதிர்ச்சியடைந்தேன். யார் என் மீது விந்தணுக்கள் நிரப்பப்பட்ட பலூனைத் தூக்கி எறிந்தது எனத் தெரியவில்லை’ எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் தனது பதிவில் அப்பெண், “டெல்லிக்கு வந்த இந்த ஏழு மாதங்களில் இது போன்ற பாலியல் தொல்லைகளை அதிகளவில் சந்தித்து வருகிறேன். தெரியாமல் படுவது போன்று என்னை சீண்டுபவர்களையும் பார்த்துள்ளேன். சமயங்களில் மோசமான பெயர்களால் என்னை அவர்கள் திட்டியும் செல்வார்கள்” என அவர் வேதனையுடன் கூறியுள்ளார்.
சமூகவலைதளத்தில் வைரலாகப் பரவிய இந்த பதிவு குறித்து போலீசாருக்கும் தெரிய வந்தது. ஆனால், சம்பந்தப்பட்ட பெண்ணை தங்களால் தொடர்பு கொள்ள இயலவில்லை எனத் தெரிவித்துள்ள டெல்லி போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரப்பூர்வமாக புகார் எதுவும் வரவில்லை என்றும் கூறியுள்ளனர்.
விரைவில் ஹோலிப் பண்டிகைக் கொண்டாடப்பட உள்ள நிலையில் டெல்லிப் பல்கலைக்கழகம் தங்களது கல்லூரி மற்றும் ஹாஸ்டல் வளாகத்தில் பாதுகாப்பை அதிகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இது தொடர்பாக அது வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஹோலிப் பண்டிகையைக் கொண்டாடுவது போல் மாணவிகள் மீது சிலர் வண்ணப்பொடி கலந்த நீர் நிரம்பிய பலூன்களைத் தூக்கி வீசுவது, வண்ணப்பொடி பூசுவது போல் அத்துமீறுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக புகார் அதிகரித்துள்ளது. எனவே இந்தாண்டு அப்படி அத்துமீறும் மாணவர்கள் ஈவ் டீசிங் செய்ததாக போலீசாரிடம் ஒப்படைக்கப்படுவர்’ என எச்சரித்துள்ளது.












Click it and Unblock the Notifications