முதல் முறையாக தேர்தல் களம் கண்ட இரோம் ஷர்மிளா.. சொன்னபடி நிராகரித்த மக்கள்!
மணிப்பூர் சட்டசபை தேர்தலில் முதல்முறையாக களம் கண்டுள்ள இரும்பு பெண்மணி இரோம் ஷர்மிளா தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார்.
இம்பால்: மணிப்பூர் தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்ட மனித உரிமை ஆர்வலர் இரோம் ஷர்மிளா தொடர்ந்து பின்னடைவை சந்தித்த வருகிறார். அவரது மக்கள் எழுச்சி மற்றும் நீதிக்கூட்டணி இதுவைர ஒரு இடத்தில் கூட முன்னிலைப் பெறவில்லை.
மணிப்பூரில் நடந்த வன்முறைகளுக்கும் மற்றும் பிற வடகிழக்குப் பகுதிகளில் அதன் விளைவுகளுக்கும் காரணமான ராணுவ சிறப்பு அதிகார சட்டத்தை திரும்பப் பெறக்கோரி 2000ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி முதல் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார இரோம் ஷர்மிளா. இது 500 வாரங்களுக்கும் மேல் தொடர்ந்தது.
இதுவே உலகின் நீண்ட உண்ணாப் போராட்டமாகும். அவரை கைது செய்த போலீசார் டியூப் வழியாக அவருக்க வலுக்கட்டாயமாக உணவை வழங்கி வந்தனர்.
தேர்தலில் போட்டியிட விருப்பம்
ஆகஸ்ட் 9, 2016 அன்று தனது 16 ஆண்டுகால உண்ணாநிலை போராட்டத்தை முடித்துக் கொண்டார் இரோம் ஷர்மிளா. மேலும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் விடுதலையான இவர் தேர்தலில் போட்டியிட்டு மணிப்பூரின் முதல்வராவதே தனது விருப்பம் என தெரிவித்தார்.
புதியக்கட்சி தொடக்கம்
இதைத்தொடர்ந்து மக்கள் எழுச்சி மற்றம் நீதிக்கூட்டணி என்ற கட்சியையும் அவர் தொடங்கினார். ஆனால் இரோம் ஷர்மிளா அரசியலுக்கு வந்தால் ஆதரவு தரமாட்டோம் என அம்மாநில மக்கள் தெரிவித்திருந்தனர்.
இரும்புப் பெண்மணிக்கு பின்னடைவு
இந்நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் இரும்புப்பெண் மணி இரோம் ஷர்மிளாவின் மக்கள் எழுச்சி மற்றும் நீதிக்கூட்டணி 3 இடங்களில் போட்டியிட்டது.ஆனால் ஒரு இடங்களில் கூட அவரது கட்சி முன்னிலைப் பெறவில்லை.
ஓரம்கட்டிய மக்கள்
மக்களுக்காக 16 வருடங்கள் உண்ணாவிரதம் இருந்த ஒரு போராளியை அம்மாநில மக்கள் ஓரம் கட்டியுள்ளனர். தேர்தலின் போது அவரது கட்சி வேட்பாளர் எரண்ட்ரோவை மர்ம நபர்கள் சிலர் தாக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.