கேரளாவின் அடையாளம் "சிப்ஸ்" மட்டுமல்ல.. "செக்ஸ்" ஊழல்களும்தான்.. சூர்யநெல்லி முதல் சசீந்திரன் வரை!
கேரள மாநில அரசியலை பாலியல் பஞ்சாயத்துகள் காலம்தோறும் உலுக்கி எடுத்து வருகின்றன. தற்போது பெண்ணிடம் தொலைபேசியில் ஆபாசமாக பேசியதால் அமைச்சர் பதவியை பறிகொடுத்துள்ளார் சசீந்தரன்.
திருவனந்தபுரம்: கேரள மாநில அரசியலில் அவ்வப்போது பாலியல் பஞ்சாயத்துகள் பல தலைவர்களை பதம் பார்த்து வருகிறது. தற்போது பெண்ணிடம் தொலைபேசியில் ஆபாசமாக பேசியதால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் சசீந்தரன்.
கேரள மாநிலம் என்றாலே தேயிலை தோட்டம், இயற்கை கொஞ்சும் அழகு, கோயில்கள், பாரம்பரிய வீடுகள், காலநிலை, உணவு பழக்க வழக்கம், மீன் உள்ளிட்டவை பிரபலங்களாகும். கேரள அரசியலில் ஆரோக்கியமான அம்சங்களும் உண்டு. அய்யோ என அலற வைக்கும் சம்பவங்களும் உண்டு.
கேரள அரசியல்வாதிகளை அதிர வைத்த பாலியல் பஞ்சாயத்து சம்பவங்களும் அதிகம்... சூர்யநெல்லி, கொத்தமங்கலம் போன்ற பல சம்பவங்களை சுட்டிக் காட்டலாம்.

40 நாட்கள்
கடந்த 1996-ஆம் ஆண்டு இடுக்கி மாவட்டம், சூர்யநெல்லியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்த மாணவியை பேருந்து ஓட்டுநர் ஒருவர் பலாத்காரம் செய்தார். அதன்பின்னர் அந்த சிறுமி பல்வேறு இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு கிட்டத்தட்ட 40 நாட்களுக்கு அடைத்து வைத்து பலரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகினார். இந்த வழக்கில் அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் சிக்கினர்.

விடுவிப்பு
இதை விசாரித்த விசாரணை நீதிமன்றம் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 35 பேருக்கு சிறை தண்டனை விதித்தது. ஆனால் கடந்த 2005-இல் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து 34 பேர் வெளியே வந்துவிட்டனர் என்பதுதான் கொடுமை.

ஒரு ஆண்டாக...
எர்ணாகுளம் மாவட்டம், கொத்தமங்கலத்தில் கடந்த 1997-ஆம் ஆண்டு சிறுமி ஒருவர் வீட்டுக்குள் ஓராண்டாக அடைத்து வைக்கப்பட்டு 100-க்கும் மேற்பட்டவர்களின் பாலியல் கொடுமைக்கு ஆளாகினார். குற்றம்சாட்டப்பட்ட 40 பேரில் 7 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் காங்கிரஸ், முஸ்லிம் லீக் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு தொடர்பிருப்பதாக சிறுமி கூறியபோதிலும் அரசியல் நெருக்கடி காரணமாக அவர்களிடம் விசாரணைகூட நடத்தவில்லை.

பெற்றோரே பெண்ணை விற்ற கொடுமை
கடந்த 2011-ஆம் ஆண்டு எர்ணாகுளம் மாவட்டத்தில் வாரப்புழா என்ற பகுதியில் விபசாரம் செய்து வரும் ஷோபா ஜான் என்பவரிடம ரூ. 1 லட்சத்துக்கு பெற்ற பெண்ணை பெற்றோரே விற்றுவிட்டனர். அந்த சிறுமி கேரளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டு 200-க்கும் மேற்பட்டவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். வாடிக்கையாளர்களை கவனிக்க மறுத்தால் அவருக்கு உடல்ரீதியான துன்புறுத்தலை விபசார கும்பல் செய்துள்ளனர். இந்த வழக்கிலும் போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து 72 பேரை கைது செய்தனர்.

தந்தையே மகளை...
கடந்த 2009-இல் எர்ணாகுளத்தில் பள்ளியில் படிக்கும் தன் மகளை தந்தையே பலாத்காரம் செய்து அவரை திரைப்பட துறையில் உள்ள சிலருக்கு விற்றுவிட்டார். இதனால் ஒன்றரை ஆண்டுகளாக உள்ளூர் அரசியல்வாதிகள், ஓய்வுபெற்ற அதிகாரிகள், திரைப்பட பிரபலங்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். 130 பேரை அடையாளம் கண்ட போலீஸார் அவர்களில் 52 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

அமைச்சரின் ஆபாச பேச்சு
இந்த வரிசையில்தான் தொலைபேசியில் பெண்ணிடம் ஆபாசமாக பேசும் ஆடியோ வெளியானதால் சர்ச்சையில் சிக்கிய கேரளா அமைச்சர் சசீந்தரன் தமது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இந்த மாநிலத்தில் நடந்த அனைத்து பாலியல் வழக்குகளில் தொடர்புடைய பெரும்புள்ளிகள் பணத்தாலும், அதிகாரத்தாலும் தண்டனையேதும் இன்றி எளிதாக வெளியே வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications