மோடியை பாராட்டுவதா? காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து சசி தரூர் 'டிஸ்மிஸ்"!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை தொடர்ந்து பாராட்டி பேசிவந்த எம்.பி. சசி தரூரின் "செய்தித் தொடர்பாளர்" பதவியை பறித்து காங்கிரஸ் மேலிடம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
மத்தியில் புதிய அரசு அமைந்தது முதல் சசி தரூர் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் பிரதமர் மோடியை புகழ்ந்து தள்ளுவதில் பெரும் முனைப்பு காட்டுகின்றனர். ட்விட்டர் பக்கத்தில் அவ்வப்போது மோடியை புகழ்ந்து வந்தார் சசி தரூ.
கடந்த 2-ந் தேதி தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்த மோடி, காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் உள்ளிட்ட 9 பிரபலங்கள் இத்திட்டத்தில் இணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
சசி தரூரும் பதிலுக்கும் மோடியை புகழ இது காங்கிரசில் புகைச்சலைக் கிளப்பியது. குறிப்பாக கேரளா காங்கிரஸ் கமிட்டியில் சசி தரூருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இது குறித்து காங்கிரஸ் மேலிடத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சசி தரூரின் செய்தித் தொடர்பாளர் பதவியை பறிக்க வேண்டும் என்று காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு அக்கட்சித் தலைவர் சோனியாவுக்கு பரிந்துரைத்தது. இதனை சோனியாவும் ஏற்றுக் கொண்டார்.
இது குறித்து இன்று காங்கிரஸ் மேலிடம் வெளியிட்ட அறிக்கையில், ஒழுங்கு நடவடிக்கை குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் சசி தரூரை செய்தித் தொடர்பாளர் பதவியில் நீக்க சோனியா ஒப்புதல் தெரிவித்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சசி தரூரின் மனைவி சுனந்தா விஷத்தால்தான் இறந்தார் என்று மருத்துவர்கள் அறிக்கையில் தெரிவித்திருந்தனர். இது சசி தரூக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் அவருக்கு மேலும் ஒரு பின்னடைவாக கட்சிப் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.