ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தப்போவது இல்லை: சுஷில்குமார் ஷிண்டே
தெலுங்கானாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சீமாந்திராவில் உச்சகட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த 3 நாட்களாக சீமாந்திராவில் மின்சார ஊழியர்களும் போராட்டத்தில் குதித்து இருப்பதால் ரயில் போக்குவரத்து, மருத்துவமனை என அனைத்து சேவைகளும் முடங்கிப் போயுள்ளன.
ஆளும் காங்கிரஸ் அரசோ, சீமாந்திரா மக்கள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்கள் என்று விளக்கம் அளித்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படக் கூடும் என்று தகவல்கள் வெளியாகின.
இது பற்றி கருத்து தெரிவித்த உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும் திட்டம் ஏதும் இல்லை. இது தொடர்பாக மத்திய அமைச்சரவைக் கூட்டத்திலும் விவாதிக்கப்படமாட்டாது.
சீமாந்திரா மக்களின் உணர்வுகள் மதிக்கப்படும். தெலுங்கானாவில் வாழும் சீமாந்திரா மக்களுக்கு முழு பாதுகாப்பு கொடுப்போம் என்றார்.