பாக். செல்லும் மோடி தாவூத்துடன் திரும்பினால்தான் வெற்றிகரமான பயணம்: சிவசேனா 'பொளேர்'
மும்பை: பாகிஸ்தானுக்கு திடீரென செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவால் தேடப்படும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமுடன் திரும்பினால் மட்டுமே அதை வெற்றிகரமான பயணமாக கருத முடியும் என்று சிவசேனா கடுமையாக விமர்சித்துள்ளது.
ரஷ்யா, ஆப்கானிஸ்தான் பயணம் மேற்கொண்டிருந்தார் பிரதமர் மோடி. ஆப்கான் பயணத்தை முடித்துவிட்டு நாடு திரும்பும் நிலையில அதிரடியாக பாகிஸ்தானுக்கு செல்ல இருப்பதாக ட்விட்டர் மூலமாக அறிவித்தார் பிரதமர் மோடி. இந்தியாவிலும் சர்வதேச அரசியலிலும் மோடியின் இந்த அதிரடி பயணம் பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.
மோடியின் இந்த திடீர் பயணத்தை காங்கிரஸ் கட்சி மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறது. இந்த நிலையில் பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான சிவசேனாவும் மோடியின் இந்த பயணத்தை விமர்சித்துள்ளது.
"பிரதமர் மோடி பாகிஸ்தானில் இருந்து திரும்பி வரும்போது இந்தியாவால் தேடப்படும் தாவூத் இப்ராகிமுடன் வந்தால்தான் அந்த பயணம் வெற்றிகரமானதாக இருக்கும் என சாடியுள்ளது சிவசேனா.
"தாவூத் கேக்"?
ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் கே.சி. தியாகியோ, பாகிஸ்தானில் பதுங்கியுள்ள நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் பிறந்த நாள் கேக்கை சாப்பிடுவதற்காகவே பிரதமர் மோடி அங்கு சென்றுள்ளார் என்றார்.