மோடி பதவியேற்பு விழாவில் நவாஸ் ஷெரீப்.. சிவசேனா கடும் எதிர்ப்பு- போராட்டம்!!
டெல்லி: நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளதற்கு பாஜகவின் முக்கிய கூட்டணிக் கட்சியான சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளது.
டெல்லியில் மே 26-ந் தேதி நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்க உள்ளார். இதற்காக இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவை அழைத்ததற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழகமே போர்க்கொடி தூக்கியுள்ளது. தற்போது பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை அழைத்ததற்கு பாஜகவின் முக்கிய கூட்டணிக் கட்சியான சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஸ்ரீநகரில் ஜம்மு காஷ்மீர் சிவசேனா தலைவர் அசோக் குப்தா தலைமையில் நவாஸ் ஷெரீப்பை அழைத்ததைக் கண்டித்து நேற்று கண்டன போராட்டம் நடத்தப்பட்டது. அந்த போராட்டத்தின் போது நவாஸ் ஷெரீப்பின் உருவபொம்மையும் எரிக்கப்பட்டது.