அமைதியை சீர்குலைப்போர் மீது கடும் நடவடிக்கை பாயும்.. சித்தராமையா எச்சரிக்கை #bengaluru
பெங்களூரு: காவிரிப் பிரச்சினையில் கர்நாடகத்திற்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதை அமைதியாகத்தான் எதிர்கொள்ள வேண்டும். அமைதியை சீர்குலைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.
பெங்களூரில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கலவரம் போய் விட்ட பின்னர் சுதாரித்த கர்நாடக அரசு அங்கு அதிரடிப்படை, துணை ராணுவப்படையினரை குவித்து நிலைமையை சரி செய்ய முயன்று வருகிறது. பெங்களூரில் 16 காவல் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மிக மோசமான கலவரத்திற்குப் பின்னர் தற்போது அங்கு அசாதாரணமான நிலை தொடர்கிறது. இந்த நிலையில் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று சித்தராமையா கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், கர்நாடகத்திற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளோம்.
மக்கள் இந்த நேரத்தில் அமைதி காக்க வேண்டும். யாருக்கும் பிரச்சினை கொடுக்கக் கூடாது. பிரச்சினை தருவோர், அமைதியை சீர்குலைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் சித்தராமையா.
பெங்களூரில், ராஜ்கோபால் நகர், காமாட்சிபாளையா, விஜய் நகர், பைதராயன்புரா, கெங்கேரி, மகடி சாலை, ராஜாஜி நகர், ஆர் ஆர் நகரா, கேபி அக்ரஹாரா, சந்திரா லேஅவுட், யஷ்வந்த்பூர், மகாலட்சுமி லே அவுட், பீன்யா, ஆர்எம்சி யார்டு, நந்தினி லேஅவுட், ஞானபாரதி ஆகிய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்ப்பட்டுள்ளது. பெங்களூரின் பிற பகுதிகளில் போலீஸ் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இன்று முற்பகல் சித்தராமையா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் கூடவுள்ளது.












Click it and Unblock the Notifications