தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் உரிய நீதி வேண்டும் – பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்
டெல்லி: நாடுமுழுவதும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாகவும், அவர்களுக்கு உரிய நீதி வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு, காங்கிஸ் தலைவர் சோனியாகாந்தி கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், ராஜஸ்தான், மகராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக நிகழ்ந்த வன்கொடுமைகளை பட்டியலிட்டுள்ளார்.
இந்த சம்பவங்களில் குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை பெற்று தருவது முக்கியம் என்று குறிப்பிட்டுள்ள அவர், அதே நேரத்தில் அனைத்து தாழ்த்தப்பட்டவர்களும் நீதியை ஓர் உரிமையாக பெறும் வகையில் நிர்வாக அமைப்பு வலுப்படுத்தப்படவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதற்காகவே கடந்த ஆட்சியில் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு திருத்த அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த அவசரச் சட்டத்தை நிலைக் குழுவுக்கு அனுப்பியதன் மூலம் காலாவதியாக தற்போதைய அரசு அனுமதித்திருப்பது ஏமாற்றமளிப்பதாகவும் கூறியுள்ளார்.
நிலைக்குழு தனது அறிக்கையை கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே அளித்திருந்தாலும், இந்தச் சட்டம் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் கொண்டுவரப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
எனவே எதிர்வரும் மழைக்கால கூட்டத்தொடரிலேனும் இந்த சட்டத்தை தாக்கல் செய்யவேண்டும் என்று சோனியா காந்தி தமது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.