அள்ளித் தருவதில் நம்மவர்கள்தான் ஒஸ்தியாம்.. வட இந்திய கோடீஸ்வரர்களை விட!
மும்பை: நன்கொடைகள் வழங்குவதில் வட இந்தியர்களை தென் இந்திய தொழிலதிபர்கள்தான் பெஸ்ட் என்று இன்டியாஸ்பெண்ட் இணையதள புள்ளிவிவரச் செய்தி தெரிவிக்கிறது. அதாவது வட இந்திய தொழிலதிபர்களை விட 800 சதவீதம் அதிகம் தென் இந்தியர்கள் வழங்கியுள்ளனர்.
2014 ஹுருன் இந்தியா பிலான்தபரி லிஸ்ட் என்ற அறிக்கை இந்தத் தகவலை தெரிவித்துள்ளது. இந்திய வர்த்தகர்கள், தொழிலதிபர்கள் எந்த அளவுக்கு கடந்த ஆண்டில் (2013 நவம்பர் முதல் 2014 அக்டோபர் வரை) நன்கொடைகளை அளித்துள்ளனர் என்பது குறித்த ஆய்வுப் பட்டியல் இது.
ஷாங்காயைச் சேர்ந்த ஹுருன் ஆய்வுக் கழகம் இந்த தகவல் கோப்பை சேகரித்து வெளியிட்டுள்ளது. இதில் ரூ. 10 கோடிக்கு மேல் தானம் கொடுத்தவர்களின் பட்டியல் இடம் பெற்றுள்ளது. இதில் டாப் 10 இடத்தில் தகவல் தொழில்நுட்பத்துறையைச் சேர்ந்த ஜாம்பவான்கள் இடம் பெற்றுள்ளனர்.
இதில் விப்ரோ அதிபர் ஆசிம் பிரேம்ஜி ரூ. 12,316 கோடி அளவுக்கு நன்கொடை வழங்கி முதலிடத்தில் 2வது ஆண்டாக தொடர்கிறார்.
இந்தப் பட்டியலில் 19 பேர் மேற்கு இந்தியாவைச் சேர்ந்தவர்கள் (பெரும்பாலும் மும்பை, புனேயைச் சேர்ந்தவர்கள்) இருந்தாலும், பெரும்பாலானவர்கள் தென் இந்தியாவைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.
தகவல் தொழில்நுட்பத்துறை, மீடியா, தொலைத் தொடர்பு ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்கள்தான் அதிக அளவில் தான தர்மம் செய்துள்ளனர். மொத்தமாக ரூ. 15,151 கோடி அளவுக்கு அவர்கள் நன்கொடைகளைக் கொடுத்துள்ளனர். மின்சாரத் துறை, உற்பத்தித் துறை ஆகியவற்றைச் சேர்ந்தவர்களும் ஓரளவுக்குச் செய்துள்ளனர்.
பெரும்பாலும் கல்வித்துறைக்கே அதிக அளவில் உதவிகள் கிடைத்துள்ளன. டாப் 50 பேரில் 27 பேர் கல்விக்கே அதிகம் கொடுத்துள்ளனர். அதாவது ரூ. 15,800 கோடி அளவுக்கு கல்வித்துறைக்கு நன்கொடைகள் கிடைத்துள்ளன.
டாப் 50 பேரில் 19 பேர் மேற்கு இந்தியாவைச் சேர்ந்த தொழிலிபர்கள் ஆவர். தென்னகத்தைச் சேர்ந்தவர்கள் 10 பேர். வெளிநாடுகளில் இருப்போர் 11 பேர். வட இந்தியர்கள் 8 பேர்தான். கிழக்கு இந்தியர்கள் 2 பேர்.
தென் பிராந்தியத்திலிருந்து மொத்தம் 13,301 கோடி நிதியுதவி அளித்துள்ளனர். வெளிநாடு வாழ் இந்தியர்களின் நன்கொடை 2713 கோடியாகும். மேற்கு இந்தியர்களின் பங்கு ரூ. 2090 கோடியாகும். வட இந்தியர்கள் கொடுத்த தொகை ரூ. 1443 கோடியாகும். கிழக்கு இந்தியர்களின் தொகை ரூ. 36 கோடியாகும்.
கல்விக்காக ரூ. 15,791 கோடி நன்கொடை கொடுக்கப்பட்டுள்ளது. சமூகம் மற்றும் ஊரக வளர்ச்சிக்காக ரூ. 2333 கோடியும், சுகாதாரத்திற்காக ரூ. 1447 கோடியும், சுற்றுச்சூழலுக்காக ரூ. 12 கோடியும் தரப்பட்டுள்ளது.
டிஎஸ்பி பிளாக்ராக் நிறுவன அதிபர் ஹேமேந்திர கோத்தாரி சுற்றுச்சூழல் துறைக்கு ரூ 12 கோடி நன்கொடை வழங்கியுள்ளார்.
நிறுவனங்கள் என்று எடுத்துக் கொண்டால், வேதாந்தா ரிசோர்ஸ் நிறுவனத்தின் அனில் அகர்வால் ரூ. 1796 கோடி கொடுத்துள்ளார். ஆர்சலர் மிட்டல் அதிபர் என்.என்.மிட்டல் ரூ. 81 கோடி கொடுத்துல்ளார். யுடிவி குழுமத்தின் ரோனி ஸ்க்ரூவாலா மற்றும் அவரது மனைவி ரூ. 350 கோடி கொடுத்துள்ளனர்.
கல்விக்காக 27 பேரும், சுகாதாரத்திற்காக 13 பேரும், சமூக, ஊரக வளர்ச்சிக்காக 9 பேரும், சுற்றுச்சூழலுக்காக ஒருவரும் நிதியுதவி அளித்துள்ளனர்.
சுகாதாரத்திற்காக நிதியுதவி அளித்தவர்களில் முகேஷ் அம்பானி ரூ. 603 கோடி கொடுத்துள்ளார். ரவி பிள்ளை ரூ. 145 கோடியும், இன்போசிஸ் எஸ்.கோபாலகிருஷ்ணன் ரூ. 255 கோடியும் வழங்கியுள்ளார்.
எச்சிஎல் அதிபர் ஷிவ் நாடார் கடந்த ஆண்டு ரூ. 1864 கோடியை தானமாக அளித்திருந்தார். இந்த ஆண்டு சற்று குறைந்து ரூ. 1136 கோடியை நன்கொடையாக அளித்துள்ளார்.
இந்தப் பட்டியலில் விசேஷம் என்னவென்றால் இந்தியாவில் யார் யார் நன்கொடைகளை அளித்துள்ளனர் என்பதை சீனாவைச் சேர்ந்த நிறுவனம் நமக்காக தயாரித்துக் கொடுத்திருப்பதுதான்!