கங்கையில் எச்சில் துப்பினால், குப்பையைக் கொட்டினால் 3 நாட்கள் சிறை, ரூ 10,000 அபராதம்...
டெல்லி: கங்கையை தூய்மைப் படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அந்நதியில் எச்சில் உமிழ்ந்தாலோ அல்லது குப்பைகளைக் கொட்டினாலோ சிறை தண்டனை மட்டும் அபராதம் விதிக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு ஜெயித்து, தற்போது பிரதமராக பதவியில் இருக்கும் மோடி, முன்னதாக கங்கை அழைத்ததாலேயே அங்கு வந்ததாக தெரிவித்திருந்தார். மேலும், தான் வெற்றி பெற்ற பிறகு மாசடைந்துள்ள கங்கை நதியை சுத்தப்படுத்துவதில் நடவடிக்கை மேர்கொள்ளப்படும் என அவர் உறுதியும் அளித்திருந்தார்.
அதன்படி, தான் பிரதமராக பதவியேற்றதும், தனது அரசில் ‘கங்கை சுத்திகரிப்பு' என்ற பெயரில் தனி இலாகாவை ஏற்படுத்தி, அதை நீர்வளம் மற்றும் நதிகள் மேம்பாட்டு துறை அமைச்சர் உமா பாரதியிடம் ஒப்படைத்தார்.
அதன் தொடர்ச்சியாக கங்கையை சுத்தப்படுத்தும் முயற்சியில் மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகம், நீர்வளத்துறை அமைச்சகம், சுற்றுலா அமைச்சகம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய 4 அமைச்சகங்கள் இணைந்து செயல்பட முன்வந்துள்ளன.
விரைவில் கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்தை நிறைவேற்ற தனது அமைச்சகம் ரூ.1 லட்சம் கோடி செலவில் திட்டமொன்றை தொடங்க இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார் மத்திய தரைவழி போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சரான நிதின் கட்காரி.
இந்நிலையில், கங்கை நதியில் எச்சில் உமிழ்ந்தாலோ அல்லது குப்பைகள் கொட்டினாலோ தண்டனை வழங்க அரசு முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. மூன்று நாட்கள் சிறை தண்டனை மற்றும் பத்தாயிரம் ரூபாய் வரையிலான அபராதம் விதிக்கப் படலாம் எனக் கூறப்படுகிறது.
ஏற்கனவே, இது தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி கூறுகையில், ‘கங்கை உள்ளிட்ட நதிகளை சுத்தப்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. ரூர்க்கி, கான்பூர் ஐ.ஐ.டி. விஞ்ஞானிகள் உள்ளிட்ட நிபுணர்களின் உதவியுடன் கங்கையை தூய்மைப்படுத்துவதற்கான திட்டத்தை அரசு வகுக்கும்.
அதற்காக மற்ற நதிகளைத் தூய்மைப்படுத்த மாட்டோம் என அர்த்தமில்லை. மற்ற நதிகளுக்கு முன்மாதிரியாக கங்கையை உருவாக்குவோம்' எனத் தெரிவித்திருந்தார்.