இன்று பீகார் முதல்வராக பதவியேற்கும் நிதிஷ் குமார்- குவிந்திருக்கும் அரசியல் தலைவர்கள்!
பாட்னா: பீகார் முதல்வராக ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் இன்று பதவியேற்கிறார். இதையொட்டி அரசியல் தலைவர்கள் பாட்னாவில் குவிந்து உள்ளனர்.
பீகாரில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்த மெகா கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து மற்ற மாநிலங்களிலும் பா.ஜ.கவுக்கு எதிராக மற்ற கட்சிகள் ஒருங்கிணையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்து உள்ளது.
இந்நிலையில் பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் நிதிஷ் குமார் தலைமையிலான புதிய அரசு இன்று பதவியேற்கிறது. நிதிஷ் குமார் முதல்வராகவும், லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி துணை முதல்வராகவும் பதவி ஏற்க உள்ளனர். இந்த விழாவில் பங்கேற்க கட்சி வேறுபாடுகளை கடந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களுக்கும் நிதிஷ் குமார் அழைப்பு விடுத்து இருந்தார்.
இதையடுத்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், மதச் சார்பற்ற ஜனதா தள தலைவர் தேவ கவுடா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா ஆகியோர் பாட்னா வந்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி சார்பில் மத்திய அமைச்சர்கள் வெங்கையா நாயுடு, ராஜிவ் பிரதாப் ரூடி ஆகியோர் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் திமுக சார்பில் திமுக பொருளாளர் ஸ்டாலின் இவ்விழாவில் பங்கேற்ற உள்ளார்.