ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி முழு அடைப்பு- தமிழகத்தில் இருந்து பேருந்துகள் இயக்கம் நிறுத்தம்
சென்னை/ ஹைதராபாத்: ஆந்திரா மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் தமிழகத்தில் இருந்து ஆந்திரா செல்லும் அனைத்து பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளது.
ஆந்திராவில் இருந்து தெலுங்கானா தனி மாநிலம் பிரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த விவகாரம் ஏற்கனவே நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டது. அப்போது, ஆனால் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பாக ஆந்திர மறுசீரமைப்பு சட்டத்தில் வாக்குறுதி அளிக்கப்படவில்லை; தேவையான நிதி வழங்கப்படும் என்று நிதி அமைச்சர் அருண்ஜேட்லி தெரிவித்தார்.
இது ஆந்திராவில் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி இன்று முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.
இம்முழு அடைப்புப் போராட்டத்தால் ஆந்திராவில் பெரும்பாலான இடங்களில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. ஆந்திரா அரசு பேருந்துகளும் பெரும்பாலான இடங்களில் இயக்கப்படவில்லை.
தமிழகத்தில் இருந்து இயக்கப்படும் ஆந்திரா அரசு மற்றும் தமிழக அரசு பேருந்துகளும் இயக்கப்படவில்லை. இதனால் ஆந்திரா செல்லும் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.