ரோஹிங்யா அகதிகளின் பயோ மெட்ரிக் தகவல்களை சேகரியுங்கள்.. மாநிலங்களுக்கு, மத்திய அரசு அதிரடி உத்தரவு
டெல்லி: ரோஹிங்யா அகதிகளின் பயோ மெட்ரிக் தகவல்களை சேகரித்து மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மண்டல கவுன்சில் கூட்டம் கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ராஜ்நாத்சிங் நிருபர்களிடம் கூறியதாவது:
ரோஹிங்யா முஸ்லிம் அகதிகளை இனம் காண மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். அகதிகளின் பயோமெட்ரிக் தகவல்களையும் எடுக்க வேண்டும். இந்த அறிக்கையை மாநிலங்கள், மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். இந்த அறிக்கை அடிப்படையில், மியான்மர் அரசுடன் ராஜாங்க ரீதியில் நடவடிக்கை எடுத்து இப்பிரச்சினைக்கு முடிவுகட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.
ராஜ்நாத்சிங் ஏற்கனவே அளித்த பேட்டியொன்றில், ரோஹிங்யா அகதிகள், சட்ட விரோத குடியேறிகள் என்று குறிப்பிட்டார். யாருமே இந்தியாவில் அகதிகளாக குடியேற அனுமதி கேட்கவில்லை ென்றும், எனவே, எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை அரசியலாக்க கூடாது என்றும் ராஜ்நாத்சிங் கூறியிருந்தார்.
மேலும், வட கிழக்கு மாநிலங்களில் மட்டுமல்ல, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்கலிலும் ரோஹிங்யா அகதிகள் பரவியுள்ளதாக ராஜ்நாத்சிங் ஏற்கனவே கூறியிருந்தார்.