தமிழக மாணவர் கிருஷ்ணபிரசாத் மர்ம மரணத்துக்கு காரணம் கூடுதல் பணி சுமை காரணம்?
தமிழக மாணவர் கிருஷ்ணபிரசாத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கு கூடுதல் பணி சுமை காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
சண்டிகர்: தமிழக மருத்துவ மாணவர் கிருஷ்ணபிரசாத் சண்டிகரில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கு கூடுதல் பணிசுமைதான் காரணம் என கூறப்படுகிறது.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ராமசாமியின் மகன் கிருஷ்ணபிரசாத் சண்டிகர் பிஜிஐஎம்இஆர் மருத்துவ கல்லூரியில் முதுகலை மருத்துவம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அவர் தமது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வட மாநிலங்களில் மருத்துவம் பயிலும் தமிழக மாணவர்கள் அடுத்தடுத்து மர்மமாக மரணிப்பது பெரும் சர்ச்சையானது. தற்போது கிருஷ்ணபிரசாத் உடலை தமிழகம் கொண்டுவர அவரது குடும்பத்தினர் சண்டிகர் சென்றுள்ளனர்.
இதனிடையே பயிற்சி மருத்துவர்களை பிஜிஐஎம்இஆர் மருத்துவமனை நிர்வாகம் அதிக நேரம் பணி செய்ய வலியுறுத்துவதாலேயே அங்கு இத்தகைய மரணங்கள் நிகழ்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு இதேபோல் ஒரு பயிற்சி மருத்துவர் பிஜிஐஎம்இஆர் மருத்துவமனை வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பிஜிஐஎம்இஆர் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரிக்கிறது. ஆனால் பயிற்சி மருத்துவர்கள் மட்டுமே சிகிச்சை அளிக்கின்றனர். அவர்கள் படிப்பதற்கு கூட நேரம் கிடைப்பதில்லை. அதனால்தான் விரக்தி ஏற்படுகிறது என சகமாணவர்கள் தெரிவித்துள்ளனர்.