சு.சாமி போட்ட முடிச்சு!!!: ஹைகோர்டில் தொடங்கி... சுப்ரீம்கோர்ட் வரை...
டெல்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டுகால சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஜெயலலிதா 21 நாட்கள் சிறைவாசத்திற்குப் பின்னர் ஜாமீனில் விடுதலையாகியுள்ளார்.
நீண்ட நெடிய இந்த வழக்கின் மூலகாரணமே பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசுவாமி. வழக்கின் மூலகர்த்தா என்ற வகையில் இன்றைக்கு உச்சநீதிமன்றத்திலும் ஆஜரானார் சுப்ரமணியசுவாமி.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளை எட்டிப்பிடிக்கப் போகிறது. ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கில் உயர்நீதிமன்றப் படி ஏறிய சுப்ரமணியசுவாமி இன்றைக்கு ஜாமீனை எதிர்க்க உச்சநீதிமன்றப் படி ஏறியுள்ளார். அவரது போராட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
1995, ஏப்ரல் 1...
அப்போதைய, ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி, ஒருசில பத்திரிகையாளர்களை சென்னையில் தனது அலுவலகத்துக்கு வரவழைத்திருந்தார். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீது வழக்குத் தொடர, தமிழக ஆளுநர் சென்னா ரெட்டி அனுமதி அளித்துவிட்டார் என்ற தகவலை சொன்னார் சுவாமி.
முட்டாள்கள் தினமா?
இன்று முட்டாள்கள் தினம். அதனால் சுவாமி நம்மை ஏமாற்றுகிறார் என்று செய்தியாளர்கள் கமென்ட் அடிக்க, ஆளுநர் சென்னாரெட்டி கையெழுத்திட்ட அனுமதிக் கடிதத்தின் நகலை அனைவருக்கும் வழங்கினார் சுவாமி.
வரலாற்றில் முதல்முறை
இந்திய அரசியல் சட்ட வரலாற்றில், முதலமைச்சர் மீதான ஊழல் குற்றங்களை விசாரிக்க, மாநில ஆளுநர் அனுமதி கொடுத்தது இதுதான் முதல்முறை. லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின்படி நான் தொடரப்போகும் இந்த வழக்கில், சட்டரீதியான நடைமுறைகள்படி தாமதம் ஏற்பட வாய்ப்பு இல்லை. நடைமுறை தாமதங்களையும் தவிர்க்கத்தான் சிறப்பு நீதிமன்றமும் சிறப்பு நீதிபதியும் வேண்டும் என்கிறேன். ஜெயலலிதா மட்டும் வழக்கு நடைமுறைகளுக்கு இசைந்தால், மூன்றே மாதங்களில் வழக்கை முடித்துவிடலாம்!'' என்று அப்போது கூறினார் சுப்ரமணியன் சுவாமி.
போயஸ் கார்டனில்...
ஜெயலலிதா மீது வழக்கு போடலாம்' என ஆளுநர் சென்னாரெட்டி அனுமதியளித்த கடிதத்தின் நகல், 1995ஆம் நாள் ஏப்ரல் 1 அன்று மதியம் 12.30 மணிக்கு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டு ஃபேக்ஸ் மெஷினில் வந்து விழுந்தது.
ஜெயலலிதா ரியாக்சன்
முன்னாள் குடியரசுத்தலைவர் ஆர்.வெங்கட்ராமனைத் தொடர்புகொண்டு, 'ஆளுநர் சென்னா ரெட்டி, சுப்ரமணியன் சுவாமிக்கு அளித்த அனுமதியை ரத்துசெய்யக் கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்போகிறேன். இதில் உங்கள் கருத்து என்ன?' என்று கேட்டார்.
ராஜினாமா செய்யுங்கள்
முழு விவரத்தையும் பொறுமையாகக் கேட்ட வெங்கட்ராமன் 'அது மிகப் பெரிய விபரீதமாக முடியும். இப்போதே நீங்கள் பதவியை ராஜினாமா செய்து, வேறு ஒருவரை முதல்வராக அமர்த்திவிட்டு, வழக்கை முழுமூச்சாக எதிர்கொள்ளுங்கள்' என்றார். ஆனால், அதை ஜெயலலிதா கேட்காமல் பதவியில் தொடர்ந்தார்.
தயாரான எதிர்கட்சிகள்
சுப்ரமணியசுவாமி ஏற்றிய ஊழலுக்கு விளக்கிற்கு அனைத்துக் கட்சிகளும் எண்ணெய் ஊற்றின. !1995, ஏப்ரல் 15-ஆம் தேதி தி.மு.க சார்பில், 'தமிழகத்தில் ஊழல்கள் பெருகிவிட்டன எனச் சொல்லி 539 பக்கங்கள்கொண்ட அறிக்கை அப்போதைய ஆளுநர் சென்னா ரெட்டியிடம் அளிக்கப்பட்டது.
அவர்களைத் தொடர்ந்து வாழப்பாடி ராமமூர்த்தி, பா.ம.க நிறுவனர் ராமதாஸ் ஆகியோரும் ஆளுக்கு ஓர் அறிக்கையை ஆளுநரிடம் கொடுத்தனர். ம.தி.மு.க சார்பிலும் ஊழல் பட்டியல் தரப்பட்டது.
தடைவிதிக்க மனு
'தமிழக முதலமைச்சரான தன் மீது வழக்குத் தொடுக்க ஆளுநர் அளித்த அனுமதிக்குத் தடை விதிக்க வேண்டும்' என சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை விசாரித்தார் நீதிபதி சிவராஜ் பாட்டீல். ஜெயலலிதா தரப்பு வழக்குரைஞர் பராசரன், 'முதல்வருக்கும் ஆளுநருக்கும் இடையில் ஏற்பட்ட மனக்கசப்பு மற்றும் அரசியல் காழ்ப்பு உணர்ச்சியின் காரணமாக இப்படி ஓர் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, அதை ரத்துசெய்ய வேண்டும்' என்றார். நீதிபதி சிவராஜ் பாட்டீல், 'இது மிகுந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு. எனவே, டிவிஷன் பெஞ்சுக்கு மாற்றுகிறேன்!' என உத்தரவிட்டார்.
உயர்நீதிமன்ற படி ஏறிய சு.சுவாமி
1995, ஏப்ரல் 20 அன்று ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு சென்னை உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. நீதிமன்றத்துக்கு வரும் சுப்ரமணியன் சுவாமி மீது தாக்குதல் நடத்த சிலர் திரண்டனர்.
பறந்த முட்டைகள்… செறுப்புகள்
உயர்நீதிமன்றத்திற்கு சுப்ரமணியசுவாமி வந்த உடன் கற்கள், சைக்கிள் செயின், அழுகிய முட்டை, அறுந்த செருப்புகள் ஆகியவை நீதிமன்ற வளாகத்தில் பறந்துகொண்டே இருந்தன.
தப்பிய சுவாமி
அந்த சமயம், முன்பு மதுரையில் நடந்த ஒரு கூட்டத்தில், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை அவதூறாகத் திட்டியதாகச் சொல்லி வழக்குப் பதிவுசெய்த மதுரை போலீஸ், சுவாமியைக் கைதுசெய்ய சென்னை வந்து காத்திருந்தது. அவர்களிடமும் சிக்காமல் தப்பினார் சுவாமி.
இந்த அத்தனை எதிர்ப்புகளில் இருந்தும் தப்பி நீதிமன்றத்துக்குள் வந்தார் சுவாமி. 'ஆளுநரின் உத்தரவை ரத்துசெய்ய முடியாது' என உத்தரவிட்டது உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச்!
18 ஆண்டுகால வழக்கு
1996ல் திமுக ஆட்சிகாலத்தில் வேகமெடுத்த வழக்கு 2014ல் முடிவுக்கு வந்துள்ளது. 18 ஆண்டுகாலம் நடைபெற்ற சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் அனைவரும் ஜாமீன் மனுத்தாக்கல் செய்தனர். ஆனால் அம்மனு நிராகரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் நான்கு பேரும் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து தலைமையிலான பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
2014, அக்டோபர் 17
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் புகார்தாரர் என்ற அடிப்படையில் சுப்பிரமணிய சுவாமி கருத்து தெரிவிக்க அனுமதிக்கப்பட்டது. அப்போது சுப்பிரமணியன் சுவாமி, தமிழகத்தில் மிகப் பெரிய வன்முறை வெடித்துள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக கேலிசித்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவுகிறது. அதனால் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் தரக் கூடாது என்றார்.
குட்டு வாங்கிய சுவாமி
ஜெயலலிதா இந்த வன்முறைகளைக் கட்டுப்படுத்தவில்லை. அவர் ஒருவார்த்தை கூறியிருந்தால் போதும்.. ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை என்றார். இப்படி லாவகமாக வாதடியும் நீதிபதியிடம் குட்டு வாங்கினார் சுப்ரமணியசுவாமி.
இடைக்கால ஜாமீன்
ஜெயலலிதாவின் உடல் நலத்தை இந்த வழக்கில் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என வழக்கறிஞர் நரிமன் கேட்டுக்கொண்டார். இதையடுத்து, ஜெயலலிதா உட்பட 4 பேருக்கும் ஜாமின் வழங்குவதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
டிசம்பர் 18க்கு ஒத்திவைப்பு
இதையடுத்து மேல்முறையீட்டு மனு விசாரணைக்கான ஆவணங்களை 2 மாத காலத்திற்குள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், உச்ச நீதிமன்றத்தில் டிசம்பர் 18-ஆம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என அறிவித்தனர். எப்படியோ தான் ஆரம்பித்த வழக்கை தானே முடிக்க வேண்டும் என்ற ரீதியில் உச்சநீதிமன்ற படியேறியுள்ளார் சுவாமி. நல்லவேளை இங்கே அவரை வரவேற்க அதிமுகவினர் யாரும் இல்லை என்பதுதான் சற்றே ஆறுதலான விசயம்.