ஐபிஎல் ஊழலில் வதேராவுக்குத் தொடர்பு... அதை மறைக்க சுனந்தா கொலை.. சாமி போடும் குண்டு!
டெல்லி: ஐபிஎல் ஊழலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்குத் தொடர்பு உள்ளது குறித்து சுனந்தா புஷ்கருக்குத் தெரிந்துள்ளது. இதையடுத்தே அவர் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை குறித்து சசி தரூருக்கும் கூட தெரியும் என்று சுப்பிரமணியம் சாமி கூறியுள்ளார்.
ஐபிஎல் குறித்து சுனந்தாவும் தன்னிடம் சொல்லியதாக அவரது தோழியான நளினி சிங்கும் கூறியுள்ளதால் இந்த விவகாரத்தில் புதிய பரபரப்பு கிளம்பியுள்ளது.
டெல்லியில் மரணம்
கடந்த ஜனவரி மாதம் 17ம் தேதி டெல்லியில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தனது அறையில் சுனந்தா பிணமாகக் கிடந்தார்.
பாக். பெண் செய்தியாளர் பெயர்
இந்த சம்பவத்திற்கு முன்புதான் பாகிஸ்தான் பெண் பத்திரிக்கையாளர் மெஹர் தராருக்கும், சசி தரூருக்கும் இடையே கள்ளக்காதல் என்று பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மரணத்திற்கு முன்பு தரூருக்கும், சுனந்தாவுக்கும் சண்டை நடந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. எனவே கள்ளத்தொடர்பு காரணமாக சுனந்தா தற்கொலை செய்திருக்கலாம் என்று சர்ச்சை கிளம்பியது.
இயற்கை மரணம்.. பிரேதப் பரிசோதனை அறிக்கை
சுனந்தாவின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்த டெல்லி அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழக மருத்துவர்கள இது இயற்கையான மரணம்தான் என்று அறிக்கை கொடுத்தனர். இதனால் சர்ச்சை ஓய்ந்தது. இதெல்லாம் மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி இருந்தபோது நடந்தவை.
திடீர் திருப்பம்
இந்த நிலையில் தற்போது மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் சுனந்தாவின் உடலில் பிரேதப் பரிசோதனை செய்த டாக்டர்களில் ஒருவரான சுதிர் குப்தா பரபரப்பு தகவலை வெளியிட்டார். அதாவது சுனந்தா இயற்கையாக மரணமடைந்ததாக அறிக்கை தருமாறு நிர்ப்பந்திக்கப்பட்டதாக அவர் கூறினார்.
சுப்பிரமணிய சாமியின் புது தகவல்
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் சுப்பிரமணியம் சாமி தன் பங்குக்கு ஒரு புது வெடியை வீசியுள்ளார்.
ஐபிஎல் ஊழலில் ராபர்ட் வதேரா
அதாவது ஐபிஎல்லில் நடந்த முறைகேடுகளில் பிரியங்கவின் கணவர் ராபர்ட் வதேராவுக்குத் தொடர்பு இருந்ததாகவும், இது சுனந்தாவுக்குத் தெரிய வந்ததாகவும், இது வெளியில் வந்தால் பிரச்சினையாகும் என்பதால் சுனந்தா கொலை செய்யப்பட்டதாகவும் சாமி கூறுகிறார்.
கொலை குறித்து தரூருக்குத் தெரியும்
மேலும் சுனந்தா கொலை செய்யப்படவுள்ள விஷயம் சசி தரூருக்கும் தெரியும் என்றும் சாமி கூறியுள்ளார். எனவே இந்த கொலை குறித்த முழு விவரங்களையும் வெளிக் கொணர சிபிஐ விசாரணை அவசியம் என்றும் சாமி கூறியுள்ளார்.
ஆமோதிக்கும் பத்திரிக்கையாளர் நளினி சிங்
இதற்கிடையே, ஐபிஎல் ஊழல் குறித்து சுனந்தா தன்னிடம் கூறியதாக பத்திரிக்கையாளரும், சுனந்தாவின் தோழியுமான நளினி சிங்கும் தெரிவித்துள்ளார்.
மரணத்திற்கு முன்பு
இதுகுறித்து நளினி சிங் கூறுகையில், ஜனவரி 16ம் தேதி இரவு நள்ளிரவுக்கு மேல் சுனந்தா இந்த விவகாரம் குறித்து என்னிடம் பேசினார். அடுத்த நாள்தான் அவர் மரணத்தை் சந்தித்தார். தொலைபேசி மூலம் என்னுடன் பேசினார் சுனந்தா.
ஐபிஎல் ஊழல் குறித்து
அவர் என்னிடம் என்ன பேசினார் என்பது முழுமையாக எனக்கு நினஐவில் இல்லை. ஆனால் ஐபிஎல் குழப்பம் குறித்து அவர் ஏதோ சொன்னது நினைவில் உள்ளது.
ராத்திரி 12.10 மணிக்கு
இரவு 12.10 மணிக்கு எனக்குப் போன் செய்த சுனந்தா, மெஹர் தராருக்கும், சசி தரூருக்கும் இடையே பரிமாறிக் கொள்ளப்பட்ட சில செல்போன் மெசேஜ்களை எடுத்துத் தர உதவமாறு என்னிடம் கேட்டுக் கொண்டார். நானும் எனக்குத் தெரிந்த ஒருவருக்கு இதுதொடர்பாக ஆலோசனையும், உதவியும் கேட்டிருந்தேன். ஆனால் அந்த நபர் சில மணி நேரங்கள் கழித்து எனக்குப் போன் செய்தபோது, சுனந்தா இறந்து விட்டதாக கூறினார்.
மெஹர் தொடர்பால் விரக்தியில் சுனந்தா
மெஹரும், சசி தரூரும் துபாயில் சந்தித்தது குறித்து பெரும் மன வருத்தத்தில் இருந்தார் சுனந்தா. மேலும் இருவரும் பலமுறை ஒன்று சேர்ந்து இருந்தது குறித்தும் அவர் அதிர்ச்சியுடன் இருந்தார். ஆனால் நான் அவரிடம், நீங்கள் நிறைய கற்பனை செய்கிறீர்கள் என்றேன். அதற்கு அவர், துபாய் எனக்கு மிகவும் பழகிய ஊர். அங்கு எனக்கு நிறைய நண்பர்கள் உள்ளனர். அவர்கள்தான் எனக்கு எல்லாவற்றையும் சொன்னார்கள் என்றார்.
ஆறுதல் கூறியும் முடியவில்லை
நான் அவருக்கு நிறைய ஆறுதல் கூறினேன். அவரை அமைதிப்படுத்த முயற்சித்தேன். ஆனால் அவர் அழுதபடி இருந்தார். பேசிக் கொண்டிருந்தபோது சாஹிப் என்று கூறினார். தனது கணவர் வந்து விட்டதாகவும் எனக்கு உணர்த்தி விட்டு போனை வைத்து விட்டார் என்றார் நளினி சிங்.