சுனந்தா வழக்கில் ஆதாரங்கள் அகற்றம்: 4 பேர் மீது போலீசார் சந்தேகம்
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கரின் அறையில் இருந்து ஆதாரங்களை அகற்றியது தொடர்பாக 4 பேர் மீது சிறப்பு விசாரணைக் குழுவுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆல்பிராக்ஸ் மருந்து அட்டைகளை யாரோ வேண்டும் என்றே அறையில் வைத்துள்ளனர்.
கொலையை மறைக்க அந்த 4 பேரில் ஒருவர் தான் சுனந்தாவின் அறையில் இருந்து ஆதாரங்களை அகற்றியிருக்கக்கூடும் என்று விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பணியாள் நாராயண் சிங், தரூரின் உதவியாளர் ஆர்.கே. சர்மா, குடும்ப நண்பர் சஞ்சய் திவான், தரூரின் டிரைவர் பஜ்ரங்கி ஆகிய நான்கு பேரில் ஒருவர் சுனந்தாவின் அறைக்கு சென்றுள்ளனர். அதன் பிறகே சில ஆதாரங்கள் மாயமாகியுள்ளன என்று சிறப்பு விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.
அகற்றம்
ஹோட்டல் அறையில் இருந்து சுனந்தாவின் உடைகள், காலணிகள் உள்ளிட்டவைகளை வேண்டும் என்றே அகற்றியுள்ளனர். மேற்கூறப்பட்ட நான்கில் ஒருவர் தான் சுனந்தாவின் அறைக்கு சென்று ஆதாரங்களை அகற்றியிருக்க வேண்டும் என்று விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. அவர்கள் சம்பவம் நடப்பதற்கு முன்பு அந்த அறைக்கு சென்றார்கள் என்று கூறவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆதாரங்களை அவசர அவசரமாக அகற்றியபோது கண்ணாடி உடைந்துள்ளது. அந்த நபர் கண்ணாடி துண்டுகளை அகற்றாமல் அவசரத்தில் அப்படியே விட்டுவிட்டு சென்றுவிட்டார் என்றனர் போலீசார். திட்டமிட்டு கொலை நடந்துள்ளதால் நிச்சயம் ஏதாவது ஆதாரத்தை விட்டுச் சென்றிருப்பார்கள் என்று கூறப்படுகிறது.
ஹோட்டல் ஊழியர்கள்
மாயமான பொருட்கள் சம்பவம் நடப்பதற்கு முன்பு சுனந்தா அறையில் இருந்ததாக ஹோட்டல் ஊழியர்கள் விசாரணையில் தெரிவித்துள்ளனர். சுனந்தாவை கடைசியாக உயிருடன் பார்த்தவர் நாராயண் சிங். சம்பவம் நடந்த இரவு 7.30 மணிக்கு நாராயண் சுனந்தாவை உயிருடன் பார்த்துள்ளார். நாராயண் சிங் கிளம்பிய பிறகு இரவு 7.58 மணிக்கு சுனந்தா போன் செய்துள்ளார். அது தான் அவர் செய்த கடைசி போன் அழைப்பு.
ஐபிஎல் கோணம்
ஐபிஎல் விவகாரத்துடன் தொடர்புடைய அனைவரின் பெயர்கள் அடங்கிய பட்டியலை சிறப்பு விசாரணைக் குழு தயாரித்துள்ளது. அந்த பட்டியலில் உள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது. ஐபிஎல் கோணத்தில் நிறைய விசாரிக்கப்பட வேண்டி உள்ளதாம். ஐபிஎல்லுடன் தொடர்புடைய துபாய் ஆட்களிடமும் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்பாட் பிக்சிங் முதல் அணியின் பணம் உள்ளிட்ட அனைத்தும் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.
பத்திரிக்கையாளர்கள்
சுனந்தா வழக்கு தொடர்பாக சில பத்திரிக்கையாளர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது. 2 பெண் பத்திரிக்கையாளர்களிடம் வாக்குமூலம் கேட்கப்பட்டுள்ளது. மேலும் சுனந்தாவுடன் தொடர்பில் இருந்த மேலும் 8 பத்திரிக்கையாளர்களிடமும் வாக்குமூலம் அளிக்குமாறு கூறப்பட்டுள்ளது.
தரூர்
தரூரிடம் மீண்டும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். திங்கட்கிழமை நடத்திய விசாரணையில் தரூர் அளித்த பதில்கள் திருப்திகரமாக இல்லை. அதனால் அவரிடம் மீண்டும் விசாரிக்க உள்ளோம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். உங்களை முடித்துவிடுவேன் என்று சுனந்தா எதற்காக கூறினார் என தரூரிடம் கேட்டதற்கு எனக்கு தெரியாது என்று போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
டெல்லி பங்களா
மத்திய டெல்லியில் உள்ள அரசு பங்களாவில் வைத்து சுனந்தா யாரை சந்தித்தார். சுனந்தா இறப்பதற்கு முந்தைய நாள் ஹோட்டல் அறையில் இருந்து வெளியேறிச் சென்று அரசு பங்களாவில் யாரையோ சந்தித்துள்ளார். அவர் ஹோட்டல் அறையில் இருந்து வெளியேறபோது தனியாக இல்லை. அவர் எதையோ கூற விரும்பிய நிலையில் நடந்த இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.