வடகிழக்கு மாநிலங்களில் பலாத்காரம், கொலை.. ராணுவத்தினர் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம்கோர்ட் உத்தரவு
டெல்லி: வடகிழக்கு மாநிலத்தில் நடைபெற்ற பலாத்காரம் மற்றும் கொலைகள் தொடர்பாக ராணுவத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் ககோர்ட் உத்தரவிட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட கிளர்ச்சியை அடக்க ஆயுதப்படை சட்டத்தின் மூலம், ராணுவத்திற்கு முழு பலம் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, அப்பாவி மக்களிடம் ராணுவம் அத்துமீறியதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து விசாரித்த நீதிபதிகள் அடங்கிய இரு குழுக்கள், சுப்ரீம்கோர்ட்டில் சமர்ப்பித்த அறிக்கையில், குற்றச்சாட்டில் உண்மை இருப்பதை உறுதி செய்தது.
இதுகுறித்து விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட் நீதிபதி, மதன். பி லோகூர் தலைமையிலான அமர்வு, ராணுவத்தினர் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. "இறந்தவர்களுக்கு இழப்பீடு கொடுப்பதோடு அரசின் கடமை முடியவில்லை. குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என மதன் பி. லோகூர் உத்தரவிட்டார்.
முன்னதாக மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் முகுல், ரோகட்கி கூறுகையில், "கிளர்ச்சி, தீவிரவாதம் போன்றவற்றை அடக்கும் முயற்சியின்போது, எதிர்பாராதவிதமாக நடைபெற்ற சம்பவங்களை கொண்டு, மொத்த ராணுவத்தையும் குறை கூற முடியாது. சிறப்பு கோர்ட் அமைத்து இவ்வழக்கை விசாரிக்க மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது" என்று தெரிவித்தார்.