தமிழகத்தில் நடைமுறையிலுள்ள 69% இட ஒதுக்கீடுக்கு எதிரான இடைக்கால மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம் அதிரடி
Recommended Video

டெல்லி: 69 சதவீத இட ஒதுக்கீடுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இரு மாணவிகள் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மூல வழக்கு நவம்பர் மாதம் விசாரணைக்கு வர உள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த மாணவிகள் சஞ்சனா, அகிலா அன்னபூர்ணி ஆகியோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 69% இட ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் சட்டத்தை அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாக அறிவிக்க வேண்டும் என்று கோரப்பட்டது.

இட ஒதுக்கீட்டின் அளவு 50 சதவீதத்திற்கும் கூடுதலாக இருக்கக்கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மாறாக 69% இட ஒதுக்கீடு வழங்கப்படுவதால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி, மாணவர்களில் ஒரு பிரிவினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக 19% கூடுதல் இடங்களை உருவாக்க ஆணை பெற்று பயனடைந்து வருகின்றனர்.
இந்த ஆண்டும் அதேபோன்று கூடுதல் இடங்களை உருவாக்க ஆணையிடக் கோரி தொடரப்பட்ட வழக்கு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி விசாரணைக்கு வந்த போது, அந்த கோரிக்கையை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நிராகரித்து விட்டனர். அதேநேரத்தில் தமிழகத்தில் இட ஒதுக்கீட்டின் அளவை 50 சதவீதத்திற்குள் கட்டுப்படுத்துவது பற்றி தனியாக மனு செய்யும்படியும், அதை விரைவாக விசாரித்து முடிவெடுக்கலாம் என்றும் அப்போது உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
அதன்படி தான் 69% இட ஒதுக்கீடு செல்லாது என்று அறிவிக்கக் கோரி சஞ்சனா, அகிலா அன்னபூர்ணி ஆகியோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இன்று இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
காயத்ரி என்பவர் 2007ம் ஆண்டு, 69 சதவீத எதிராக வழக்கு தொடர்ந்திருந்தாார். அந்த மூல வழக்கு, நவம்பர் மாதத்தில் விசாரிக்கப்படும் என்று, உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. எனவேதான், இடைக்கால மனுவான இது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
1994ம் ஆண்டு முதலே 69 சதவீத இட ஒதுக்கீடுக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்வதும், தள்ளுபடியாவதும் தொடர் கதையாகி வருகிறது. எனவே, மூல வழக்கு மீதான நவம்பர் விசாரணையில், இறுதியான உத்தரவு பிறப்பிக்கபட வாய்ப்புள்ளது. பிற மாநிலங்கள் அரசாணை போன்றவற்றின் மூலம் இட ஒதுக்கீடு வழங்குவதும் சில நேரங்களில் நீதிமன்றங்கள் அதற்கு தடை விதிப்பதும் நடந்துள்ளது. ஆனால், தமிழக அரசோ, 69 சதவீத இட ஒதுக்கீட்டை சட்டமாக்கியுள்ளது.
குடியரசு தலைவர் ஒப்புதல் பெற்ற சிறப்பு சட்டத்திற்கு எதிராக செயல்பட முடியாது என உச்சநீதிமன்றம் முன்பு இதுபோன்ற வழக்குகளில் கருத்து தெரிவித்திருந்தது நினைவிருக்கலாம்.
சமூக நீதியை காப்பதில், கருணாநிதி, அவர் வழியில் ஜெயலலிதா ஆகியோர், அக்கறை காட்டிய நிலையில், இப்போது உச்சநீதிமன்றத்தில் இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதால், தமிழக அரசு திறம்பட இதை கையாள வேண்டும் என்ற கோரிக்கைகள் பிற கட்சிகளிடமிருந்து எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications