சென்னை-டெல்லி புல்லட் ரயில் திட்ட ஆய்வுப்பணி துவங்கியது: ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு
டெல்லி: சென்னை-டெல்லி இடையேயான புல்லட் ரயில் திட்டத்திற்கான ஆய்வுப் பணிகள் துவங்கியுள்ளது என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.
சென்னை-டெல்லி, அகமதாபாத்-மும்பை இடையே புல்லட் ரயில்களை இயக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் உறுப்பினர் ஜோதிராதித்ய சிந்தியா நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது கேட்டார். அதற்கு மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு பதில் அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
சென்னை-டெல்லி, அகமதாபாத்-மும்பை உள்ளிட்ட 9 வழித்தடங்களில் அதிவேக ரயில்கள் இயக்கப்பட உள்ளது. அதற்கான ஆய்வுப்பணி துவங்கிவிட்டது. அதிவேக ரயில் தடங்களை மேம்படுத்த கிலோமீட்டருக்கு ரூ.150 கோடி செலவாகும். இந்த நிதி செலவால் அரசு கருவூலத்திற்கு கூடுதல் சுமை எதுவும் ஏற்படாது. அதற்கான முதலீட்டை பட்ஜெட்டுக்கு பிறகு உருவாக்குவோம்.
அதிவேக ரயில் திட்டத்தில் பங்குதாரராக சேர சீனா, ஜப்பான் உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் முன்வந்துள்ளன என்றார்.
அதற்கு சிந்தியா, பயணிகள் அதிகம் உள்ள வழித்தடங்களை விட்டுவிட்டு அகமதாபாத்-மும்பை வழித்தடத்தை தேர்வு செய்தது பற்றியும், பிரதமர் மோடியின் நல்ல நாட்கள் பற்றியும் கேள்வி எழுப்பினார்.
சிந்தியாவின் கேள்விக்கு சுரேஷ் பிரபு அளித்த பதில், அதிவேக ரயில்களால் மட்டும் நல்ல நாட்களை கொண்டு வர முடியாது. கெட்ட காலத்தில்(காங்கிரஸ் ஆட்சி) அதிக காலம் இருந்துவிட்டதால் நல்ல நாட்களுக்கு திரும்ப கால அவகாசம் ஆகும் என்றார்.