சுஷ்மா ஸ்வராஜ்தான் துணைப் பிரதமர்- பாஜகவில் விஸ்வரூபமெடுக்கும் புது 'பஞ்சாயத்து'
டெல்லி: லோக்சபா தேர்தலில் வென்று ஆட்சி அமைத்தால் யார் துணை பிரதமர் என்பது குறித்து பாரதிய ஜனதா கட்சியில் புதிய பஞ்சாயத்து வெடித்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் தொகுதியில் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அம்மாநில முதல்வர் பிரகாஷ்சிங் பாதல், பாஜக ஆட்சி அமைத்தால் இங்கு போட்டியிடும் அருண் ஜேட்லிதான் துணை பிரதமர் என்று கூறியிருந்தார்.
இது பாரதிய ஜனதாவில் உடனடியாக சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் பாஜக ஆட்சி அமைத்தால் சுஷ்மா ஸ்வராஜ்தான் துணை பிரதமர் என்று கூறி புதிய பஞ்சாயத்துக்கு வித்திட்டிருக்கிறார் மத்திய பிரதேச அமைச்சர் சுரேந்திர பட்வா.
மத்திய பிரதேச மாநிலத்தின் விதிஷா தொகுதியில் சுஷ்மா ஸ்வராஜ் போட்டியிடுகிறார். அத்தொகுதியில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அமைச்சர் சுரேந்திர பட்வா, பாஜக ஆட்சி அமைத்தால் சுஷ்மா ஸ்வராஜூக்கு துணைப்பிரதமர் போன்ற முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்ற நம்பிக்கையோடு நாங்கள் காத்திருக்கிறோம் என்றார்.
இதே கருத்தை சுஷ்மா ஸ்வராஜ் பங்கேற்கும் அனைத்துக் கூட்டங்களிலுமே அமைச்சர் சுரேந்திரா பட்வா பேசி வருகிறார். இதை சுஷ்மாவும் புன்னகையுடன் ஏற்றுக் கொண்டு அமைதியாக இருக்கிறார். ஏற்கெனவே அருண் ஜேட்லியை "துணை பிரதமர்" பதவிக்கு அகாலிதளம் முன்னிறுத்தி வரும் நிலையில் மத்திய பிரதேச பாஜகவினர் சுஷ்மா ஸ்வராஜை முன்னிறுத்துவது அக்கட்சியில் புதிய பஞ்சாயத்துக்கு வழிவகுத்துள்ளது,