இந்தியா, பாகிஸ்தான் பேச்சுவார்த்தை குறித்து மோடி - சுஷ்மா சுவராஜ் ஆலோசனை
டெல்லி: பாகிஸ்தானுடன் பாதுகாப்பு தொடர்பான உயர் மட்ட அளவிலான பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து ஆலோசிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடியை, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேற்றிரவு சந்தித்தார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை இம்மாதம் 15ம் தேதி நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். மத்திய வெளியுறவுச் செயலர் ஜெய்சங்கரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தார்.
பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தையை நடத்துவது குறித்து இக்கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்துள்ளார். எனினும், பதன்கோட் தாக்குதலை அடுத்து இருநாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில், பதன்கோட் தாக்குதல் சம்பவத்தின் மூளையாக செயல்பட்டதாகக் கருதப்படும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மவுலானா மசூத் அசாரை, பாகிஸ்தான் போலீசார் கைது செய்திருப்பதாக வெளியான தகவல் உறுதிப்படுத்தப்பட்டது அல்ல என விகாஸ் ஸ்வரூப் தெரிவித்துள்ளார்.
பதான்கோட் தாக்குதல் தொடர்பாக ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் உட்பட 12 பேரை பாகிஸ்தான் காவல்துறை கைது செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது.