வாஜ்பாயிக்கு அஞ்சலி செலுத்த சென்ற சுவாமி அக்னிவேஷ் மீது 2-வது முறையாக தாக்குதல்
வாஜ்பாயிக்கு அஞ்சலி செலுத்த டெல்லி சென்ற சுவாமி அக்னிவேஷ் மீது இரண்டாவது முறையாக கும்பல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
டெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு அஞ்சலி செலுத்த டெல்லி சென்ற ஜார்க்கண்ட்டைச் சேர்ந்த சுவாமி அக்னிவேஷ் மீது பாஜக அலுவலகம் அருகே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் 79 வயதான சுமாமி அக்னிவேஷ் மீது இரண்டாவது முறையாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நேற்று உடல் நலக் குறைவால் காலமானார். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக டெல்லி தீன் தயாள் சாலையில் உள்ள பாஜக அலுவலகத்தில் வைக்கப்பட்டது.

இதையடுத்து வாஜ்பாயின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஜார்க்கண்ட்டைச் சேர்ந்த ஆன்மீகவாதி சுவாமி அக்னிவேஷ் டெல்லி சென்றார். அப்போது அவர் பாஜக அலுவலகம் அருகே ஒரு கும்பலால் பிடித்து தள்ளப்பட்டார். அவருடைய ஆடையை பிடித்து இழுத்து தள்ளி தாக்கியுள்ளனர். இது குறித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவாமி அக்னிவேஷ் மீதான தாக்குதல் குறித்து போலீஸார் கூறுகையில், ஒரு கும்பல் அவரைத் தாக்க முயற்சி செய்தனர். தற்போது அவர் பாதுகாப்பாக இருக்கிறார் என்று தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சுவாமி அக்னிவேஷ் கூறுகையில், "நான் வாஜ்பாயிக்கு அஞ்சலில் செலுத்த சென்றேன். அப்போது ஒரு கும்பல் என்னைத் தாக்கினார்கள். நாங்கள் இரண்டு மூன்று பேர்தான் இருந்தோம். அவர்களும் அமைதியாக இருந்தார்கள். அந்த கும்பல் என்னை அடித்தார்கள். தள்ளினார்கள். என்னுடைய தலைப்பாகையை அகற்றினார்கள். அவர்கள் என்னை துரோகி துரோகி என்று திட்டி அடித்தார்கள்" என்று தெரிவித்தார்.
சுவாமி அக்னிவேஷ் மீதான சம்பவம் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவாமி அக்னிவேஷ் பசு பாதுகாப்பு கும்பல் கொலைகளைக் கண்டித்து பேசியதால், அவர் கடந்த ஜூலை 17 ஆம் தேதி ஜார்க்கண்ட் மாநிலத்தில் யுவ மோர்ச்சா உள்ளிட்ட பாஜகவினரால் தாக்கப்பட்டார் என்பது குறிபிடத்தக்கது. இதன் மூலம் சுவாமி அக்னிவேஷ் இரண்டாவது முறையாக தாக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications