'எப்படி இருந்த நாம இப்படி ஆயிட்டோம்'.. தமிழக மக்களின் "மைன்ட் வாய்ஸ்" இப்ப இதுதாங்க!
எப்படி இருந்த நாம இப்ப இப்படி ஆயிட்டோமே என்பது தான் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு நடக்கும் ஆட்சியில் மக்களின் மனக்குமுறலாக இருக்கிறது.
Recommended Video

சென்னை : தமிழக மக்களின் பல்வேறு பிரச்னைகளிலும் மத்திய அரசுக்கு அடிபணிந்து உரிமைகளை விட்டு கொடுத்து வரும் அரசால் மக்கள் அனைவரும் எப்படி இருந்த நாம இப்படி ஆகிட்டோமே என்று குமுறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்த போது மத்திய அரசு கொண்டு வரும் மக்களை பாதிக்கும் திட்டங்களுக்கு எதிர்ப்பு குரலாவது கொடுத்து வந்தார். இதனால் தமிழக பிரச்னைகளில் கைவைப்பது என்றால் சற்று தயக்கம் காட்டியே வந்தது மத்திய அரசு. அப்படியே மத்திய அரசின் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாக இருந்தாலும் அவற்றில் தன்னுடைய நிலைப்பாட்டில் இருந்து விட்டுக்கொடுக்காமல் நெத்தியடியாக பொட்டில் அடித்தார்போல பேசிவிட்டு வருவார் ஜெயலலிதா.
2011ம் ஆண்டு முதல் 5 ஆண்டு ஆட்சியில் ஜெயலலிதாவின் மீது இருந்த நம்பிக்கை காரணமாகவே மீண்டும் அவருக்கு 2016 சட்டசபை தேர்தலிலும் மக்கள் அதிமுக ஆட்சிக்கு வாய்ப்பளித்தனர். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்னர் வரை தமிழகப் பிரச்னைகள் நல்ல நிலையில் தான் போய்க்கொண்டிருந்தன.

எதிர்ப்புக் குரல் இல்லை
ஜெ. ஆட்சிக்கு வந்ததும் தேர்தல் வாக்குறுதி அளித்தது போல முதற்கட்டமாக 500 டாஸ்மாக் கடைகளை மூடினார். காவிரி பிரச்னையில் சட்டரீதியிலான போராட்டத்தை நல்ல முறையில் வழி நடத்தி எடுத்துச் சென்றார். ஆனால் அவரின் மறைவிற்குப் பிறகு அதிமுக ஆட்சி மட்டும் தான் நடக்கிறதே தவிர அவரிடம் இருந்த கம்பீரம், மக்களை பாதிக்கும் பிரச்னைகளில் எதிர்த்துக் குரல் கொடுக்கும் தில் ஆட்சியாளர்களுக்கு இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

பறிபோகும் உரிமைகள்
நீட் விவகாரத்தில் தமிழகமே எதிர்ப்புக் குரல் கொடுத்தது. ஆனால் நாங்களும் எதிர்க்கிறோம் என்று தமிழக அரசு சொன்ன போதும் அதற்கு மத்திய அரசு செவிமடுக்கவில்லை. இறுதியில் சட்ட ரீதியில் தேர்வு தமிழகத்திற்குள் புகுத்தப்பட்டுவிட்டது. ரேஷன் கார்டுகளை ஸ்மார்ட் கார்டுகளாக மாற்றும் திட்டத்திலும் பல்வேறு குளறுபடிகள். பொதுவிநியோகத்திட்டத்தில் எந்த பாதிப்பும் இருக்காது ஜெயலலிதா வழியில் மக்களுக்கு பொருட்கள் நியாயவிலைக்கடைகளில் கிடைக்கும் என்றார்கள். ஆனால் தற்போது ரேஷன் கடைகளில் முதல் விலை உயர்வாக சர்க்கரையின் விலை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. இனி அடுத்து மண்எண்ணெய் விலையும் உயர வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

டெங்குவை கட்டுப்படுத்தவில்லை
டெங்கு காய்ச்சலால் மரணங்கள் இல்லை என்று அரசு கூறினாலும், அன்றாடம் நடக்கும் உயிரிழப்புகள் மக்களை அரசின் மீது அதிருப்தி அடையச் செய்துள்ளது. அரசு டெங்குவை கட்டுப்படுத்தத் தவறியதே பிஞ்சுக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அநியாயமாக உயிரிழந்து வருவதாக மக்கள் அதிருப்தியில் உள்ளனர் என்பது தான் உண்மையான நிலைப்பாடு.

சின்னத்திற்காக தள்ளிப்போகும் தேர்தல்
மற்றொருபுறம் டெங்கு கட்டுப்படுத்தப்படாமல் போனதற்கு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாததே காரணம் என்றும் மக்கள் கருதுகின்றனர். நீதிமன்றம் 2 முறை காலக்கெடு விதித்தும் இரட்டை இலை சின்னப் பிரச்னை காரணமாக உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதை தள்ளிப்போட்டு வருகிறது அரசு.

தலைவிரித்தாடும் ஊழல்
அமைச்சர்கள் முதல் அரசு அலுவலகங்கள் வரை தலைவிரித்தாடும் லஞ்சம், முதியோர் உதவித்தொகை முறையாக கிடைக்காமல் அல்லாடும் மக்கள் என தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் பிரச்னைகளில் சிக்கி உழன்றே நாட்களை கடத்தி வருகின்றனர். அதிமுக அரசு எஞ்சிய காலகட்டத்தை நல்ல முறையில் நடத்தி முடிக்கும் என்று ஆட்சியாளர்கள் கூறி வருகின்றனர்.

மக்கள் பிரச்னைக்கு வாங்க
இது உண்மையிலேயே சாத்தியமாக வேண்டுமானால் ஆட்சியாளர்கள் கட்சிப் பிரச்னையை ஓரம்கட்டிவைத்துவிட்டு மக்கள் பிரச்னையில் அக்கறை செலுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர் மக்கள். எப்படி இருந்த நாம இப்படி ஆயிட்டோமே என மக்கள் நொந்து போகாமல் நிம்மதியான வாழ்க்கையை வாழ ஆட்சியாளர்கள் வழிவகுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications