பெல்லாரி: தமிழக லாரிகள் மீது கல்வீச்சு.. உயிருக்கு பயந்து டிரைவர்கள் ஓட்டம் #TNNeedsKaveri
பெங்களூர்: காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீரை திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதை எதிர்த்து கன்னட அமைப்புகள் இன்று கர்நாடகா பந்த் நடத்துகின்றன. காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை பந்த் நடைபெறுகிறது.
பெங்களூரில் பஸ், டாக்சி, ஆட்டோக்கள் ஓடவில்லை. மாநிலம் முழுக்கவுமே வாகன இயக்கம் முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது. வட கர்நாடகாவில் வழக்கமாக காவிரி பிரச்சினையில் தீவிரம் குறைவாக இருக்கும். ஆனால் இம்முறை அங்கும் ஆதரவு அதிகரித்துள்ளது.

இதன் ஒருபகுதியாக பெல்லாரியில் இன்று தமிழக பதிவெண் கொண்ட லாரி மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பெல்லாரி பைபாஸ் சாலையில், டி.என்.52, எஃப் 8667 என்ற பதிவெண் கொண்ட வீனஸ் ரோட்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான லாரி சென்றதை போராட்டக்காரர்கள் கவனித்தனர்.
இதையடுத்து லாரியை சூழ்ந்து கொண்ட கன்னட சங்கத்தினர், டிரைவர் கீழே இறங்க கூட அனுமதிக்காமல், கருங்கற்களை கண்ணாடிகள் மீது வீசினர். இதனால் கண்ணாடி உடைபட்டு கல் உள்ளே போனது. அச்சமடைந்த டிரைவர், அவசரமாக கீழே குதித்து ஓடினார்.
இதேபோல மேலும் இரு லாரிகளும் கல் எறிந்து தாக்குதலுக்கு உள்ளானது. இந்த சம்பவங்கள் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளதாக பெல்லாரி போலீஸ் எஸ்.பி ஆர்.சேத்தன் 'ஒன்இந்தியாவிடம்' தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications