'ஷாக்'.. டீ விற்பவர் மகன் என்பதால் உ.பி. பள்ளியில் இருந்து மாணவன் நீக்கம்!
பக்பட்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் டீ விற்பவரின் மகன் என்பதால் மாணவர் ஒருவரை தனியார் பள்ளி நீக்கியுள்ளது பெரும் அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது.
உ.பி.யின் பக்பட் மாவட்டத்தில் சுவாமி மஹாவீர் அகாடமி என்ற ஆங்கில பள்ளியில் படித்த 6-ம் வகுப்பு மாணவன் அரிஹந்த் ஜெயின். அவரது தந்தை டீ விற்பனை செய்து வருபவராம். டீ விற்பனை செய்பவரின் மகன் தங்களது பள்ளியில் படிப்பது அவமானம்(!) எனக் கருதி திடீரென பள்ளியில் இருந்து டிஸ்மிஸ் செய்துள்ளது.
இந்த அதிர்ச்சி தகவல் வெளியானதும் இது குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டது. பக்பட் மாவட்ட மாஜிஸ்திரேட் ஹிரிதியா சங்கர் திவாரி மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாட்டின் தலைமைப் பதவி வகிக்கும் பிரதமர் மோடியே ஒருகாலத்தில் டீ விற்பனையாளர். தமிழகத்திலும் கூட டீ கடை நடத்திய ஓ.பன்னீர்செல்வம் 2 முறை தற்காலிக முதல்வராகி இருக்கிறார்.
அப்படி என்ன டீ விற்பனை செய்வதில் அவமானம் இருக்கிறதோ?