பெங்களூர் சாலைகளில் இருந்து 37 கிலோ ஆணி சேகரித்த என்ஜினியர்: போட்டது யார் தெரியுமா?
பெங்களூர்: பெங்களூரில் வசிக்கும் சாப்ட்வேர் என்ஜினியர் ஒருவர் பஞ்சர் கடைக்காரர்களால் சாலைகளில் வேண்டும் என்றே போடப்படும் ஆணிகளில் 37 கிலோ ஆணிகளை இதுவரை சேகரித்துள்ளார்.
பெனிடிக்ட் ஜெபகுமார்(44) என்ற சாப்ட்வேர் என்ஜினியர் கடந்த 2012ம் ஆண்டு பெங்களூருக்கு வந்துள்ளார். பனசங்கரியில் தங்கியிருக்கும் அவரது அலுவலகம் பெல்லந்தூரில் உள்ளது. தினமும் அவுட்டர் ரிங் ரோடு வழியாக செல்கையில் சரியாக பஞ்சர் போடும் கடைகளுக்கு அருகே அவரது வாகனத்தின் டயரில் ஆணி குத்தி பஞ்சர் ஆகிவிடும்.
முதலில் இதை சாதாரணமாக எடுத்துக் கொண்ட அவருக்கு பின்பு தான் உண்மை புரிந்தது. பஞ்சர் கடைக்காரர்கள் தங்களுக்கு வியாபாரம் நடக்க வேண்டும் என்பதால் வேண்டும் என்றே சாலைகளில் ஆணிகளை போட்டு வைப்பதை ஜெபகுமார் உணர்ந்தார்.
இதையடுத்து கடந்த 2014ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் அவர் சாலைகளில் கிடக்கும் ஆணிகளை அகற்றி வருகிறார். காலை 7 மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பும் அவர் தினமும் சாலைகளில் இருந்து ஆணிகளை அகற்றி சேகரித்து வருகிறார்.
இதுவரை அவர் 37 கிலோ ஆணிகளை சேகரித்துள்ளார். இது குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கும் வரை ஆணிகளை சேகரிக்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளார். மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஆணிகளை சேகரித்து வரும் அவர் 2014ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஃபேஸ்புக்கில் `My Road, My Responsibility' (என் சாலை, என் பொறுப்பு) என்ற பெயரில் கணக்கு துவங்கி தான் சேகரிக்கும் ஆணிகள் குறித்த புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.