'டெஹல்கா' தருண் தேஜ்பாலிடம் 2 மணி நேரம் கோவா போலீசார் கிடுக்குப் பிடி விசாரணை
பனாஜி: பெண் பத்திரிகையாளரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் டெஹல்கா நிறுவன ஆசிரியர் தருண் தேஜ்பாலிடம் கோவா போலீசார் நேற்று 2 மணி நேரம் கிடுக்குப் பிடி விசாரணை நடத்தினர்.
கோவாவில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது டெஹல்கா பத்திரிகையின் நிறுவன ஆசிரியர் தேஜ்பால் தம்மை பாலியல் பலாத்காரம் செய்தார் என்று சக பெண் பத்திரிகையாளர் புகார் தெரிவித்திருந்தார். இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து கோவா போலீசார், தருண் தேஜ்பால் மீது பலாத்கார முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும் நேற்று மாலை 3 மணிக்குள் நேரில் ஆஜராக வேண்டும் என்று தருண் தேஜ்பாலுக்கு கோவா போலீஸ் சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் சனிக்கிழமை வரை கால அவகாசம் கேட்டு தேஜ்பால் கடிதம் எழுதியிருந்தார். இதை நிராகரித்த கோவா போலீஸ், தருண் தேஜ்பாலை தேடி டெல்லி சென்றது. ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டார்.
அத்துடன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை நேற்று வாபஸ் பெற்ற தருண் தேஜ்பால், கோவா அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார். இம் மனுவை விசாரித்து நேற்று பிற்பகல் 2.30 மணி வரை அவரை கைது செய்யக்கூடாது என்று கோவா நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது.
பின்னர் டெல்லியில் இருந்து மனைவியுடன் தருண் தேஜ்பால் மாலை 5 மணிக்கு கோவா வந்தடைந்தார். அவர்களை கோவா போலீசார் பாதுகாப்பாக நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றனர். அப்போது தேஜ்பால் மீது தாமதமாக புகாரை பதிவு செய்திருப்பதாகவும், இது அரசியல் சதி என்றும் அவரது வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, வழக்கின் தன்மையை மட்டுமே பார்ப்பதாக கூறினார். மேலும் பலாத்கார புகார் கூறிய பெண்ணின் பெயரை வெளியிட்டதற்கு தேஜ்பால் வழக்கறிஞருக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, அந்த பெண்ணை இழிவுபடுத்தி அவரது வாழ்க்கையில் விளையாடக்கூடாது என்றும், இது சிறிய தவறு இல்லை என்றும் குறிப்பிட்டார்.
பின்னர் தேஜ்பாலின் முன் ஜாமீன் மனு மீதான விசாரணையை இன்று காலை வரை ஒத்திவைப்பதாகவும் அதுவரை அவரை கைது செய்யக்கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இதன் பின்னர் தருண் தேஜ்பாலை விசாரணைக்காக கோவா போலீசார் அழைத்து சென்றனர். அவரிடம் 2 மணி நேரம் கிடுக்குப் பிடி விசாரணை நடத்தியது கோவா போலீஸ்.