தெலுங்கானா வாகனங்களுக்கு புதிய ரிஜிஸ்ட்ரேசன் எண்... ஜூன் 2ம் தேதி முதல் அமல்
ஹைதராபாத்: புதிதாக உருவாகும் தெலுங்கான மாநிலத்திற்கான வாகனப் பதிவு குறியீட்டு எண் தனியாக உருவாக்கப்பட்டு இதற்கான ஒப்புதலைப் பெற மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது ஆந்திர அரசு.
தெலுங்கானா மாநிலம் ஜூன் 2ம் தேதி முறைப்படி செயல்பாட்டுக்கு வருகிறது. அதைத் தொடர்ந்து வாகனப் பதிவு குறியீட்டு எண்ணை மத்திய அரசு அங்கீகரித்து வெளியிடும்.
புதிய குறியீடு...
தற்போது ஆந்திராவுக்கு "AP" என்ற குறியீடு உள்ளது. தெலுங்கானாவுக்கு "TG" என்ற குறியீட்டை உருவாக்கியுள்ளனர். இதுவே இந்தியாவின் 29வது மாநிலமாக திகழப் போகிற தெலுங்கானாவின் வாகனப் பதிவு குறியீடாக இருக்கும்.
வரும் ஜூன் 2ம் தேதி முதல்...
ஜூன் 2ம் தேதி முதல் இந்தப் புதிய குறியீட்டை நடைமுறைக்குக் கொண்டு வரலாம் என்று எதிர்பார்ப்பதாக ஆந்திர பிரதேச போக்குவரத்து ஆணையர் ஆனந்த ராமு கூறியுள்ளார்.
வாகன விற்பனை மந்தம்...
இதற்கிடையே புதிய மாநிலம் உருவான பிறகு வாகனம் வாங்கலாம் என்று தெலுங்கானாவைச் சேர்ந்த பலரும் முடிவு செய்து வாகனம் வாங்குவதையே ஒத்திவைத்து வருகிறார்களாம். இதனால் வாகன விற்பனை தெலுங்கானா பகுதியில் திடீர் மந்தமாகியுள்ளதாம்.
புதிய பதிவுக்கு மாறுபவர்கள்...
அதேசமயம், பழைய வாகனப் பதிவை வைத்திருப்போர், புதிய பதிவுக்கு மாற விரும்பினால் அதற்காக மீண்டும் சாலை வரியைக் கட்டத் தேவையில்லை என்றும், ஒரு குறிப்பிட்ட கட்டணத்தை மட்டும் கட்டி மாற்றிக் கொள்ளலாம் என்றும் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications