மனோரமாவின் கேரக்டர்களைத் தொகுத்துப் பாடமாக்க வேண்டும்... ரோஜா கோரிக்கை
ஹைதராபாத்: நடிகை மனோரமாவின் மறைவிற்கு தெலுங்குத் திரையுலகமும் இரங்கல் செலுத்தியுள்ளது.
மனோரமாவின் கதாபாத்திரங்களைத் தொகுத்து நடிப்பு பயிற்சி கல்லூரியில் பாடமாக வைக்க வேண்டும் என நடிகை ரோஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழைப் போலவே தெலுங்கு ரசிகர்கள் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் மனோரமா. 1980-ம் ஆண்டு 'சுபோதயம்' (நல்ல உதயம்) என்ற படம் மூலம் தெலுங்கில் அறிமுகமான மனோரமா, 'பாவநச்சாடு', 'அருந்ததி' உள்பட 40 தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். தமிழில் மனோரமாவை ஆச்சி என அழைப்பது போல், தெலுங்கில் அவ்வம்மா ( பாட்டியம்மா) என அழைக்கப்படுகிறார்.
இந்நிலையில், நேற்று மாரடைப்பால் காலமான மனோரமாவிற்கு தெலுங்குத் திரையுலகினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தெலுங்கு நடிகர்கள் சங்க தலைவர் நடிகர் ராஜேந்திர பிரசாத் கூறும் போது, ‘‘மனோரமா மறைவு திரையுலகத்துக்கு பேரிழப்பாகும். அவரைபோல் யாரும் நடிக்க முடியாது'' என்றார்.
நடிகை ரோஜா கூறும் போது, ‘‘1000 படங்களுக்கு மேல் நடித்தாலும் கர்வம் இல்லாமல் அன்பாக பழகக்கூடியவர் மனோரமா. தெலுங்கு படங்களில் கூட அதன் அர்த்தத்தை பலரிடம் கேட்டு தெரிந்து அதற்கு ஏற்ப தனது சொந்த குரலிலேயே பேசி நடித்து உள்ளார். அவரது ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தொகுத்து நடிப்பு பயிற்சி கல்லூரியில் பாடமாக வைக்க வேண்டும்'' எனக் கோரிக்கை விடுத்தார்.