குஜராத்தில் இப்படி ஒரு கிராமமா! பழைய இந்தியா இதுதான்... கோயிலில் நோன்பு திறந்த முஸ்லிம்கள்
அஹமதாபாத்: குஜராத்தில் 1,200 ஆண்டுகள் பழமையான கோயிலில் இஸ்லாமியர்கள் நோன்பு திறப்பதற்காக இடம் ஒதுக்கப்பட்டது மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக அமைந்து இருக்கிறது.
இந்தியாவில் எங்கு திரும்பினாலும் சாதி, மத ரீதியிலான மோதல்கள் முன்பை விட அதிகரித்து உள்ளன. மதத்தின் பெயரால் கும்பல் படுகொலைகள், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் பன்மடங்கு பெருகி இருக்கின்றன.
18 நாளில் 5 வழக்குகள் சிபிஐக்கு மாற்றம்... மேற்கு வங்கத்தில் மம்தா அரசுக்கு சிக்கலா? என்ன நடக்கிறது?
கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரத்தின் தொடர்ச்சியாக அறங்கேறிய இஸ்லாமியர் மீதான தாக்குதல்கள், ராஜஸ்தானிலும், வட மாநிலங்களிலும் நடந்திருக்கும் கலவரங்களின் படங்கள் பார்ப்போரை பதைபதைப்புக்கு ஆளாக்குகின்றன.
குஜராத்தில் இந்து முஸ்லிம் சகோதரத்துவம்
இதுமட்டும் இந்தியா இல்லை, உண்மையான இந்தியா அழகானது என்பதை உணர்த்தி இருக்கிறது ஒரு சம்பவம். அதுவும் மதக் கலவரங்களின் தொடக்கப் புள்ளியாக பார்க்கப்படும் பிரதமர் நரேந்திர மோடியின் குஜராத் மாநிலத்தில். அங்குள்ள பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள டல்வானாவில் அமைந்து இருக்கும் 1,200 ஆண்டுகள் பழமையான இந்து கோயிலில் இஸ்லாமியர்கள் நோன்பு திறக்க இடம் வழங்கப்பட்டு உள்ளது.
ரமலான் நோன்பு
இந்த மாதம் 3 ஆம் தேதி முதல் இஸ்லாமியர்கள் 5 கடமைகளுள் ஒன்றான ரமலான் நோன்பை நோற்று வருகின்றனர். அதிகாலை சாப்பிட்டு பகல் முழுவதும் உண்ணாமல், தண்ணீர் அருந்தாமல் நோன்பிருக்கும் இவர்கள் மாலை சூரியன் மறையும்போது இஃப்தார் உணவ உண்டு நோன்பை நிறைவு செய்வது வழக்கம். இதனை முன்னிட்டு நாட்டின் பல மதநல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் பல்வேறு சம்பவங்கள் நடந்து வருகின்றன.
கோயில் நிர்வாகத்தின் பெருந்தன்மை
வட்காம் தாலுக்காவில் உள்ள டல்வானாவில் விர் மகாராஜ் மண்டிர் என்ற 1,200 ஆண்டுகள் பழமையான கோயில் அப்பகுதி மக்களின் மத மற்றும் கலாச்சார சின்னமாக திகழ்ந்து வருகிறது. இதில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் இஸ்லாமியர்கள் நோன்பு திறக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர். இந்த இஃப்தார் நிகழ்வில் 100-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்.
ஏன் இந்த முயற்சி?
இதுகுறித்து கோயில் தலைமை பூசாரி பங்கஜ் தாகர் தெரிவிக்கையில், "இப்போதுதான் முதல் முறையாக கோயிலில் இஸ்லாமியர்களை நோன்பு திறக்க அழைத்து இருக்கிறோம். இது எங்கள் கிராமத்தில் வரலாற்று சின்னம். நாங்கள் சகோதரத்துவத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கிறோம். எனவே இந்த ஆண்டு அவர்களை கோயிலுக்கு நோன்பு திறக்க அழைத்தோம்." என்றார்.
மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டு
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த வசீம் கான் என்பவர் கூறுகையில், "எங்கள் கிராமத்தில் சமூக மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். ஒவ்வொருவரின் திருவிழாக்களின்போது தோளோடு தோள் நின்று கொண்டாடி வருகிறோம். எங்கள் கிராம பஞ்சாயத்து நிர்வாகம் இந்த இஃப்தாருக்கு அழைப்பு விடுத்தது. நாங்கள் கலந்து கொண்டோம்." என்றார்.