"ஜாக்கிரதை".. அதிமுக எம்.பிக்களுக்கு "வார்னிங்" கொடுத்த தம்பித்துரை!
டெல்லி: அதிமுக எம்.பிக்கள் மீது கட்சி மேலிடம் அதிருப்தியுடன் உள்ளது. எனவே அவர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பத்திரிகையாளர்களுடன் எந்தவிதமான தொடர்பையும் மேற்கொள்ளக் கூடாது. இது மேலிடத்தின் உத்தரவு என்று லோக்பா துணை சபாநாயகர் தம்பித்துரை அறிவுரை கூறியுள்ளார்.
டெல்லியில் நடந்த அதிமுக எம்.பிக்கள் கூட்டத்தின்போதுதான் தம்பித்துரை இந்த அட்வைஸை வழங்கியுள்ளார்.
அதிமுகவுக்கு லோக்சபாவில் 37 எம்.பிக்களும், ராஜ்யசபாவில் 11 பேரும் உள்ளனர். இவர்களில் பெரும்பாலும் புதியவர்கள்தான். எப்படிப் பேச வேண்டும் என்று கூடத் தெரியாதவர்கள்.
இந்த பின்னணியில் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரின் தொடக்கத்திற்கு முன்பாக அதிமுக எம்.பிக்களின் கூட்டம் கூட்டப்பட்டது. அதில் லோக்சபா குழு தலைவர் வேணுகோபால், ராஜ்யசபா குழு தலைவர் நவநீத கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். அனைத்து எம்.பிக்களும் ஆஜராகியிருந்தனர். இந்தக் கூட்டத்தில் துணை சபாநாயகரான தம்பித்துரைதான் உரையாற்றினார். மற்றவர்கள் அமைதியாக கேட்டுக் கொண்டனர்.
இந்தக் கூட்டத்தின்போது தம்பித்துரை பேசுகையில், நமது எம்.பி.,க்கள் பலரும், பத்திரிகைகளுக்கு செய்தி தந்து கொண்டிருப்பதாக கட்சி மேலிடத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. அதற்கேற்ற வகையில், எம்.பி.,க்களின் செயல்பாடுகள் குறித்தும், கட்சி மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்தும், டெல்லியிலிருந்து நிறைய செய்திகள் வெளியாகின்றன. இது, தடுக்கப்பட வேண்டும்.
அதிமுக எம்.பி.,க்கள் யாரும், பத்திரிகையாளர்களுடன் பேசக்கூடாது. அவர்களுடன் தொடர்பே கூடாது. அது நேரடியாகவும் சரி, மறைமுகமாகவும் சரி தவிர்க்கப்பட வேண்டும். அறவே உறவு வைத்திருக்கக் கூடாது. இதில் கட்சி மேலிடம் உறுதியாக உள்ளது. இதை மீறினால் ஒழுங்கு நடவடிக்கை நிச்சயம்.
மத்திய அரசை எதிர்த்தும் பேச வேண்டாம், ஆதரித்தும் பேச வேண்டாம். நாம் நடுநிலையாக இருப்போம் என்றாராம் தம்பித்துரை.
தம்பித்துரை, லோக்சபா துணை சபாநாயகராக இருக்கிறார். அதாவது எக்கட்சியையும் சேராதவராக சபாநாகர், துணை சபாநாயகர் பதவி கருதப்படும். அப்படி இருக்கையில் எப்படி அதிமுக உறுப்பினருக்கு தம்பித்துரை ஆலோசனை கூறிப் பேசினார் என்பது புரியவில்லை.