ராம் ரஹிமின் 1000 ஏக்கர் ஆசிரமத்தை சுற்றிலும் ராணுவம் குவிப்பு.. ஆதரவாளர்கள் வெளியேற உத்தரவு
சிர்சா: பலாத்கார வழக்கில் தேரா சச்சா அமைப்பின் தலைவர் குர்மித் ராம் ரஹிம் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து ஹரியானாவில் கலவரம் வெடித்துள்ளது.
பல இடங்களில் 144 தடை உத்தரவு நிலவுகிறது. சிர்சா மாவட்டத்தில் ராம் ரஹிமின் தலைமை ஆசிரமம் உள்ளது. அங்கு லட்சக்கணக்கான ஆதரவாளர்கள் குழுமியுள்ளனர். ஆண், பெண், குழந்தைகளும் இதில் உண்டு. அவர்களை வெளியேற்றுவதற்காக ராணுவ வீரர்கள் அந்த ஆசிரமத்தை சுற்றி வளைத்தனர். துணை ராணுவ படை வீரர்களும், அதி விரைவுப்படை போலீசாரும் ஆசிரமம் சென்றுள்ளனர்.
ஆசிரமத்தை சுற்றியுள்ள பகுதிகளை படிப்படியாக கட்டுப்பாட்டில் எடுத்துள்ளனர். மொத்தம் 1000 ஏக்கர் பரப்புடன், உள்ளேயே பள்ளி, விளையாட்டு கிராமம், திரையரங்கு, மருத்துவமனை போன்றவை கொண்ட டவுன்ஷிப்தான் இந்த ஆசிரமம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒலிபெருக்கிகள் மூலம், ஆசிரத்திற்குள் உள்ள ஆதரவாளர்களை வெளியேற ராணுவம் அறிவுறுத்தி வருகிறது. முன்னதாக, ராணுவம் ஆசிரமத்திற்குள் சென்றுவிட்டதாக வெளியான தகவல்களை அது மறுத்துள்ளது. வெளியில்தான் நிற்பதாகவும், கலவரத்தை தடுப்பதே தங்கள் நோக்கம் எனவும் ராணுவ செய்தித்தொடர்பாளர் ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.